

அமமுக தேர்தல் அறிக்கை வரும் 12-ம் தேதி சென்னையில் வெளியிடப்படும் என, அக்கட்சி தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக எனப் பல முனைகளாக இந்தத் தேர்தலில் போட்டி நிலவுகிறது.
ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியுடன் அமமுக கூட்டணி அமைத்துள்ளது. ஏஐஎம்ஐஎம் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமமுக தலைமைக்கழகம் இன்று (மார்ச் 9) வெளியிட்ட அறிவிப்பு:
"ஜெயலலிதாவின் லட்சியக் கனவுகளை வென்றெடுக்கப் போராடும் அமமுக சார்பில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியீட்டு சிறப்பு பொதுக்கூட்டம் வரும் 12.03.2021 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அமமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு சிறப்புரையாற்றவிருக்கிறார். இப்பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.
இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்டம், ஊராட்சி, கிளைச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் அமமுக உடன்பிறப்புகள், பொதுமக்கள் என அனைவரும் கரோனா கால வழிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து போதிய தனிமனித இடைவெளியுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.