Published : 09 Mar 2021 04:51 PM
Last Updated : 09 Mar 2021 04:51 PM

முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் மண்ணைக் கவ்வுவார்; நடந்ததைச் சொன்னால் கலவரமாகிவிடும்: விஜய பிரபாகரன் பேச்சு

முதல்வர் பழனிசாமி இம்முறை எடப்பாடி தொகுதியில் மண்ணைக் கவ்வுவார் என, விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

கேட்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்ததால், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று அறிவித்தார்.

இதையடுத்து, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கட்சி நிகழ்ச்சியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசியதாவது:

"மக்கள் நலக்கூட்டணியின்போது தேமுதிகவினரே நமக்கு வாக்கு செலுத்தவில்லை என்றனர். அன்றைக்கு நாம் விஜயகாந்தின் வாக்குக்குக் கட்டுப்பட்டிருந்தால், இன்றைக்கு நமக்கு இந்த நிலைமை வந்திருக்குமா? எதற்கு 10 சதவீத வாக்குகள் 2.5 சதவீதமாகக் குறைந்தன? நம் ஆட்களே கோபித்துக்கொண்டு ஓட்டுப் போடவில்லை. எனக்கு சாதி எண்ணமே கிடையாது. அதைப் பற்றித் தெரியாது. சாதியைப் பற்றிப் பேசச் சொன்னால் அதில் நான் முட்டாளாக இருப்பேன். அதில் எனக்கு பெருமை. ஆனால், அந்தச் சாதியினர், இந்தச் சாதியினரின் ஓட்டு போய்விட்டது எனக் கூறினர். நம் அனைவருக்கும் தெரிந்தது ஒரே சாதிதான். தேமுதிகதான் நம் சாதி. நம் மதத்தின் ஒரே கடவுள் விஜயகாந்த் மட்டும்தான்.

விஜயகாந்த் சொல்வதற்கு அப்படியே கட்டுப்பட்டால் நம்மை ஏன் மற்றவர்கள் கேலி, கிண்டல் செய்யப் போகிறார்கள். கூட்டணிக்கு வந்துவிட்டதால் பழைய மாதிரியே எங்களைக் கருதக்கூடாது. அதென்ன பேரம் பேசுவது? விஜயகாந்த் எப்போதும் கொடுக்கும் இடத்தில்தான் இருக்கிறார். வாங்கும் இடத்தில் இல்லை. கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்களை உடையவர் விஜயகாந்த்.

விஜயகாந்தால் சுயம்பாக உருவாக்கப்பட்ட கட்சி தேமுதிக. யாரோ ஆரம்பித்து அவர் தலைவராக இருக்கவில்லை. ஆவர் ஆரம்பித்த கட்சி. அவருக்குத் தெரியாதா? பெரிய கட்சி 170, 190 தொகுதிகளில் நிற்கிறோம் எனச் சொல்கிறபோது, இரண்டாவதாக வரக்கூடிய கட்சி 40, 50 தொகுதிகளில் நிற்கிறோம் எனச் சொல்லக்கூடாதா? நீங்கள் யார் சீட்டைத் தீர்மானிக்க? நாங்கள் கேட்கும் சீட்டுகளைக் கொடுக்க முடியவில்லையென்றால், உங்கள் சீட் ஒவ்வொரு தொகுதியிலும் பறிக்கப்படும். தேமுதிக தொண்டர்கள் அதற்கு வேலை செய்வார்கள்.

என்ன எப்போதும் எடப்பாடி பழனிசாமி என்கிறீர்கள். இந்த முறை அவர் எடப்பாடி தொகுதியில் மண்ணைக் கவ்வுவார். நான் ஆணவத்தில் பேசவில்லை. எனக்கு ஆணவம் இல்லை. மக்களின் கோபம் என்னால் பிரதிபலிக்கப்படுகிறது. உங்கள் ஆணவத்தை மக்கள் அடக்கப் போகின்றனர். நிறைய நடந்திருக்கிறது. அதை நான் சொன்னால், கலவரமாகிவிடும்".

இவ்வாறு விஜய பிரபாகரன் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x