Last Updated : 09 Mar, 2021 03:19 PM

 

Published : 09 Mar 2021 03:19 PM
Last Updated : 09 Mar 2021 03:19 PM

புதுச்சேரியில் புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (மார்ச் 9) வெளியிட்டுள்ள தகவல்:

‘‘புதுச்சேரி மாநிலத்தில் 1,704 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 17 பேருக்கும், காரைக்காலில் 6 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேவில் 2 பேருக்கும் என மொத்தம் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 908 ஆக உயர்ந்துள்ளது. இதில் மருத்துவமனைகளில் 86 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 92 பேரும் என மொத்தம் 178 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் இறப்பு எண்ணிக்கை 670 ஆகவும், இறப்பு விகிதம் 1.68 சதவீதமாகவும் உள்ளது. இன்று 19 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 60 (97.88 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் இதுவரை 6 லட்சத்து 40 ஆயிரத்து 162 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 5 லட்சத்து 95 ஆயிரத்து 226 பரிசோதனைகளின் முடிவில் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. 35 நாட்களில் 11,139 சுகாதாரப் பணியாளர்களும், 24 நாட்களில் 3,383 முன்களப் பணியாளர்களும், 7 நாட்களில் 4,262 பொதுமக்களும் என 18 ஆயிரத்து 784 பேருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’.

இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x