Last Updated : 09 Mar, 2021 02:58 PM

 

Published : 09 Mar 2021 02:58 PM
Last Updated : 09 Mar 2021 02:58 PM

புதுச்சேரியில் என்.ஆர்.காங் 16 தொகுதிகளில் போட்டி: பாஜக, அதிமுகவுக்கு 14 இடங்கள் ஒதுக்கீடு

செய்தியாளர்களைச் சந்தித்த ரங்கசாமி, நிர்மல்குமார் சுரானா உள்ளிட்டோர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பாஜக, அதிமுக கூட்டணி உறுதியானது. இதில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், பாஜக - அதிமுகவுக்கு 14 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக இக்கூட்டணியில் இடம்பெறவில்லை.

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம் பெறுமா என்பதில் இழுபறி நீடித்து வந்தது. நேற்று (மார்ச் 8) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் பேசினார். அதைத் தொடர்ந்து, நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு, கூட்டணியை ரங்கசாமி உறுதி செய்தார். அதைத் தொடர்ந்து, நேற்று இரவு எந்தெந்தத் தொகுதி என்பது தொடர்பாக, பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் நட்சத்திர ஹோட்டலில் கலந்து ஆலோசித்தனர்.

அதைத் தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது நிர்மல்குமார் சுரானா கூறுகையில், "புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பாஜக, அதிமுக கட்சிகள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக, அதிமுகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், தொகுதிகள் ஒதுக்கீடு விரைவில் செய்யப்படும். 3 கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கும். பாமக இதில் இடம்பெறவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் எம்எல்ஏக்கள் முதல்வரைத் தேர்வு செய்வார்கள்" என்று தெரிவித்தார்.

ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கோரி கோஷம்

இதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடந்த அறை முழுக்கக் கூடியிருந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவாளர்கள் முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிக்கக் கோரி கோஷமிட்டனர். அவர்களை ரங்கசாமி அமைதியாக இருக்கக் கூறினார்.

அதைத் தொடர்ந்து, "ரங்கசாமி வாழ்க" என என்.ஆர்.காங்கிரஸாரும், "பாரத் மாதா கீ ஜே" என பாஜகவினரும் போட்டி போட்டு கோஷமிட்டனர்.

இதைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 9) தனியார் ஹோட்டலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியும், பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தொகுதிகள் எத்தனை என்பது தொடர்பாக ஒதுக்கீடு செய்யப்படாததால், அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x