Published : 09 Mar 2021 11:38 AM
Last Updated : 09 Mar 2021 11:38 AM

2020-21ஆம் நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன?- டி.ஆர்.பாலுக்கு மத்திய இணையமைச்சர் பதில்

2020-21 ஆம் நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, மத்திய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன என, மக்களவையில் திமுக எம்.பி.யும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

டி.ஆர்.பாலு, நேற்று (மார்ச் 8) மக்களவையில், 2020-21ஆம் நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, மத்திய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன? என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூரிடம், "கொள்ளை நோய்த் தொற்று தாக்குதலினால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதார வளர்ச்சிக் குறியீடு, முதல் காலாண்டில், 23.9 விழுக்காடு வீழ்ச்சியும், இரண்டாம் காலாண்டில், 7.5 விழுக்காடு வீழ்ச்சியும், 2020-21 நிதியாண்டில் 7.7 விழுக்காடு வீழ்ச்சியும் அடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது?” என டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.

மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூர்: கோப்புப்படம்

அதற்கு, மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூர் மக்களவையில் அளித்த பதில்:

"தேசிய புள்ளியியல் அலுவலகத்தின், தேசிய வருமான மதிப்பீட்டின்படி 2020-21ஆம் ஆண்டின், பொருளாதார வளர்ச்சி குறியீடு, முதல் காலாண்டில், 24.4 விழுக்காடு வீழ்ச்சியும், இரண்டாம் காலாண்டில், 7.3 விழுக்காடு வீழ்ச்சியும், 2020-21 நிதியாண்டில் 8 விழுக்காடு வீழ்ச்சியும் அடைந்துள்ளது.

கொள்ளை நோய்த் தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தைச் சீரமைக்க, இந்தியாவின் சுயச் சார்பு திட்டங்களின் மூலம், இந்திய ரிசர்வ் வங்கி, ரூபாய் 27 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதரத்தை முடுக்கிவிட, திட்டங்களை அறிவித்துள்ளது.

பிரதம மந்திரி வேலை வாய்ப்புத் திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான நிதியுதவித் திட்டம், தொழிற்சாலைகளுக்கான நில வங்கித் திட்டம் மற்றும் புதிய மின்சாரக் கட்டணக் கொள்கைகள் இவற்றின் மூலம், இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுகாதாரத் துறையில், கொள்ளை நோய்த் தொற்றினைத் தவிர்க்க, தடுப்பூசிக்காக ரூபாய் 35 ஆயிரம் கோடி அளவுக்கும், தேசிய சுகாதாரத் திட்டம், சத்துணவுத் திட்டம், அனைவருக்குமான குடிநீர் திட்டம், ஆகியவற்றின் மூலம் கட்டமைப்புகள் உறுதியளிக்கப்பட்டுள்ளன.

13 துறைகளில் உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டங்களும், 7,400 தேசிய கட்டமைப்புத் திட்டங்களும், ஒரு கோடி மக்களுக்குப் பயனளிக்கும் வகையில், மின்சார வசதிகளும், காப்பீட்டுத் துறையில், அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கவும், தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயங்களை வலுப்படுத்தவும், கூட்டுறவுத் துறைகளை மேம்படுத்தவும், தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விளைபொருள்களின் உற்பத்தி விலையில், ஒன்றரை மடங்கு லாபம் கிடைக்கும் வகையில், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்த தேவையான முதலீடுகளை அதிகரிக்கவும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறையின் வளர்ச்சிக்கு, ரூபாய் 15 ஆயிரத்து 700 கோடி அளவுக்கும், மத்திய அரசு உதவிகள் செய்துள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையின்படி 15 ஆயிரம் பள்ளிக்கூடங்களை தரம் மேம்படுத்தவும், இந்திய உயர்கல்வி ஆணையம், ராணுவத்திற்கான 100 பள்ளிகள், 750 ஏகலைவன் மாதிரிப் பள்ளிகள், பட்டியலினத்தவர்களுக்கான கல்வி உதவித் திட்டம் ஆகிய திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.

தேசிய ஆராய்ச்சி திட்டத்திற்காக, ரூபாய் 50 ஆயிரம் கோடி நிதி உதவியும், ககன்யான் திட்டம், ஆழ் கடல் ஆராய்ச்சித் திட்டம், கணினி வழி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு ரூபாய் 3,708 கோடி ஒதுக்கீடு, தேயிலை தொழிலாளர்களின் நலத்திற்காக ரூபாய் 1,000 கோடி எனப் பல்வேறு திட்டங்களின் மூலம், பொருளாதாரத்தை மீட்டெடுக்க, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது".

இவ்வாறு அனுராக் சிங் தாகூர் பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x