Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 03:11 AM

கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரம்: என்ஐஏ அதிகாரிகள் தமிழகத்தில் தீவிர விசாரணை

கேரளாவில் நடந்த தங்கக் கடத்தல் விவகாரம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் தமிழகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தல் சம்பவத்தில் தீவிரவாத தொடர்பு கண் டறியப்பட்டதால் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர் பாக என்ஐஏ அதிகாரிகள் தமிழகத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய விமான நிலையங்கள் வழியாக நடந்த சுமார் 400 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு விவரங்களை என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதில், கடத்தல்காரர்களுக்கு உதவிய சுங்கத் துறை மற்றும் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குறித்து விசாரணை நடைபெற்றது.

ஆவணங்களைக் கைப்பற்றினர் இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பிரபல நகைக் கடையில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் காட்டப்படாமல் தங்கக் கட்டிகள் வாங்கியது மற்றும் விற்றது தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றினர்.

மேலும், கேரளா மற்றும் இலங்கையில் இருந்து இதுபோல கடத்தி வரப்படும் தங்கக் கட்டிகளை பிரபல நகைக் கடைகள் வாங்கி விற்பனை செய்து வரலாம் என்ற சந்தேகமும் வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து கேரளா தங்க கடத்தல் வழக்கை விசாரிக்கும் தமிழக என்ஐஏ அதிகாரிகள், பிரபலமாக உள்ள நகைக் கடைகளின் நிர்வாகத்தினரிடம், அவர்கள் தங்கம் வாங்கும் முறை குறித்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கேரளாவில் சிலரிடம் நடத்திய விசா ரணையில், வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்படும் தங்கக் கட்டிகளில் ஒரு பகுதியை தமிழகத் துக்கு கொண்டுவந்து விற்பனை செய்திருப்பதும், அவற்றை நகைப் பட்டறை களில் உருக்கி நகைகள் செய்திருப்பதும் தெரியவந்தது.

அதன் அடிப்படையில் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x