Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM

சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் 4 ஆயிரம் படுக்கைகளுடன் கண்காணிப்பு மையங்கள் தயார்: முகக் கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க சுகாதாரத் துறை செயலர் உத்தரவு

கரோனா தொற்று அதிகரித்து வருவதால், சென்னையில் 4 ஆயிரம்படுக்கைகளுடன் கண்காணிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன என்று சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் குறைந்து வந்த கரோனா தொற்று, தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா பரவலை தடுக்க, தீவிரதடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. விமான நிலையங்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, பயணிகளுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வெளிநாடுகள் மற்றும் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா தவிர, மற்ற மாநிலங்களில் இருந்துவருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது முகக் கவசம் அணியாத மக்களிடம், முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுரைவழங்கி ரூ.200 அபராதம் வசூலித்தார். முகக் கவசம் அணியாதவர் களுக்கு உடனடி அபராதம் வசூலிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னையை தொடர்ந்து கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் கவனம்செலுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 72 மணி நேரத்துக்கு முன்பாக கரோனாபரிசோதனை செய்திருக்க வேண்டும். அதில் தொற்று இல்லை (நெகட்டிவ்) என்றால் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். லண்டனில் இருந்து வருபவர்களுக்கு தமிழகத்தில் மீண்டும் பரிசோதனை செய்யப்படும். அறிகுறிஇருந்தால் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்.

சென்னையில் கரோனா கண்காணிப்பு மையங்கள் 4 ஆயிரம் படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளன. மற்ற மாவட்டங்களிலும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் அச்சப்படத் தேவைஇல்லை. மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா போல தமிழகத்திலும் நோய்த் தொற்று அதிகரிக்கக் கூடாது என்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்திருக்கிறது. மக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதுவரை கரோனா விதிகளை பின்பற்றாத 14.21 லட்சம் பேரிடம் இருந்து ரூ.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x