

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டின் முன்பு போராட்டம் நடைபெறுவதைத் தடுக்க,அத்தெரு பகுதியில் இரும்புத்தடுப்புகள் வைத்து மறிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்படுகிறது.
தேனி மாவட்டம், கள்ளிப்பட்டி அருகே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. இங்கு பெரும்பாலும் நிர்வாகிகள் சந்திப்பு, கட்சிக் கூட்டம் நடைபெறும். இதற்காக அவ்வப்போது இங்கு அவர் வந்து செல்வார்.
மேலும் அவருக்குச் சொந்தமான வீடுகள் பெரியகுளம் தெற்கு மற்றும் வடக்கு அக்ரஹாரத்திலும் உள்ளன. இங்கு முக்கிய நபர்களைசந்திப்பார். அவர் உள்ளூரில் இருந்தால் பொது மக்களும், பல்வேறுஅமைப்பினரும் அவரை சந்தித்து கோரிக்கைகளை தெரிவிப்பர்.
இந்நிலையில் கம்பம், பெரியகுளம், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவுக்கு எதிராகபோராட்டங்கள் நடந்து வருகின்றன. கருப்புக்கொடி கட்டுதல், கட்சிக்கு எதிரான பிரசாரம் என சீர்மரபினர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். வேளாளர் சமூகத்தினரும் போராட்டம் நடத்திவருகின்றனர். சமீபத்தில் போடியில் துணை முதல்வர் விழாவில் எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, துணை முதல்வர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில், பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டின் தெரு பகுதிகளில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இரும்பு தடுப்புகளை வைத்து மறித்துள்ளனர். அவ்வழியாகச் செல்வோருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.