Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் கதிரியக்கப் பகுதி உள்ளூர் திட்டக் குழுமம் (நிலா கமிட்டி) இயங்கி வருகிறது. இக்கமிட்டியின் பரிந்துரைப்படி அணு கதிர்வீச்சு பாதிப்பு பகுதிகளாக வரையறை செய்யப்பட்ட 14 கிராமங்களில் குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள இடங்களை பத்திரப்பதிவு செய்ய தடைவிதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு சுற்றுப்புற கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தேர்தலை புறக்கணிப்பதாக விளம்பர பலகைகள் ஆங்காங்கே வைத்துள்ளனர்.
இந்நிலையில், அரசாணையில் உள்ள 14 கிராமங்களின் குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள இடங்களை பத்திரப்பதிவு செய்ய ஆட்சேபம் இல்லை என நிலா கமிட்டியின் உறுப்பினர் செயலர், மாவட்ட பதிவாளருக்கு கடிதம் வழங்கியுள்ளார். இதில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ளபடி பத்திரப் பதிவைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து, நிலா கமிட்டி மேற்கண்ட கடிதத்தை வழங்கியுள்ளது.
இந்நிலையில், மணமை மற்றும் கல்பாக்கம் சுற்றுப்புற கிராம மக்கள் கூட்டமைப்பின் தலைவர் பக்கீர் முகம்மது தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நிலா கமிட்டியை கலைக்க வேண்டும், நிலா கமிட்டியின் பத்திரப்பதிவு தடை உத்தரவுக்கான அரசாணையை ரத்து செய்யும் வரையில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து, கல்பாக்கம் சுற்றுப்புற கிராம மக்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறும்போது, "சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு நிலா கமிட்டி மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது கண்துடைப்பு நாடகம். அரசாணை மூலம் 14 கிராமங்களில் உள்ள நிலங்களின் மீதான நம்பகத்தன்மை அழிந்துவிட்டது. இதனால், இப்பகுதியில் யாரும் நிலம், வீடுகளை வாங்கவும் நிலங்களின் மீது கடன் வழங்கவும் முன்வரமாட்டார்கள். அதனால், அரசாணையை ரத்து செய்யும் வரையில் தேர்தலை புறக்கணித்து, தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT