Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM

என்ன கேட்டாலும் செய்து தருகிறேன்: நிலக்கோட்டை அதிமுக வேட்பாளர் முதன்முதலாக பிரச்சாரம்

நீங்கள் என்ன கேட்டாலும் செய்து தருகிறேன், எனக்கு ஓட்டுப்போடுங்கள், எனக் கூறி நிலக்கோட்டை அதிமுக வேட்பாளர் தேன்மொழி பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. தேன்மொழி மீண்டும் போட்டியிடுகிறார். நிலக்கோட்டை வேட்பாளராக தேன்மொழி பெயர் இடம் பெற்றது அதிமுகவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நேற்று அவர் நிலக்கோட்டை தொகுதிக்குட்பட்ட வத்தலகுண்டு காளியம்மன் கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.

கோயில் அருகே பூ விற்றுக்கொண்டிருந்த பெண் ஒருவர் வேட்பாளருக்கு ஒரு முழம் பூ வழங்கி வாழ்த்தினார். உங்களிடம்தான் முதலில் வாக்குக் கேட்கிறேன் எனக்கு வாக்களியுங்கள், என்றார். தொடர்ந்து ‘நீங்கள் என்ன கேட்டாலும் செய்து தருகிறேன், எனக்கு வாக்களியுங்கள்,’ என்று அங்கிருந்த மக்களிடம் வாக்குக் கேட்டார். அதிமுக நகரச் செயலாளர்கள் சேகர், பீர்முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பிரச்சாரத்தின்போது உடன் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x