Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திருச்சி திமுகவினர் மீது 20 வழக்குகள் பதிவு

திருச்சியில் திமுக பொதுக்கூட்டத்துக்காக அனுமதியின்றி கொடி கட்டுதல் உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திமுகவினர் மீது 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருச்சி அருகே சிறுகனூரில் திமுக சார்பில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களை வரவேற்கும் விதமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழிநெடுகிலும் திமுக கொடிகள், பதாகைகள், கட் அவுட்கள், மின் விளக்கு அலங்காரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், உரிய அனுமதியின்றி கொடிகள் கட்டியதாகவும், விளம்பரங்கள் செய்ததாகவும் திமுக திருச்சி வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அம்பிகாபதி, நிர்வாகிகள் செந்தில், மணிகண்டன் உள்ளிட்டோர் மீது கொள்ளிடம் காவல் நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல, சிறுகனூர் பகுதியில் அனுமதியின்றி விளம்பரம் செய்தது உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திமுக நிர்வாகிகள் மூர்த்தி, முத்துச்செல்வம், ஆனந்தராஜா உள்ளிட்டோர் மீது சிறுகனூர் காவல் நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர திருச்சி மாநகரத்திலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக விமானநிலையம், கன்டோன்மென்ட், கே.கே.நகர், ரங்கம், உறையூர், காந்தி மார்க்கெட் உள்ளிட்ட காவல் நிலையங்களில் திமுக நிர்வாகிகள் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x