Published : 08 Mar 2021 04:25 PM
Last Updated : 08 Mar 2021 04:25 PM

தேர்தல் சின்னங்களை ஒதுக்குவதில் புதிய முறை: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கில், தேர்தல் சின்னங்களை ஒதுக்குவதில் புதிய முறையைக் கையாளுவது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவை அளித்துள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்,

அவரது மனுவில், “1997-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சி, அதுமுதல் உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது. தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சியான தங்கள் கட்சிக்கு, 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கப்பட்டது.

எதிர்வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதால், எங்கள் கட்சிக்கு பொதுச் சின்னமான தொலைக்காட்சி சின்னத்தை ஒதுக்கக் கோரி அளித்த மனுவைப் பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், தொலைக்காட்சி சின்னத்தைப் போல இருக்கும் கரும்பலகை, குளிர்சாதனப் பெட்டி, எழுது பலகை, தீப்பெட்டி போன்ற சின்னங்கள் பொதுச் சின்னப் பட்டியலில் இருப்பதால் குழப்பம் ஏற்படுகிறது. அதனால் தொலைக்காட்சி சின்னத்தைப் போல இருக்கும் சின்னங்களைப் பொதுச் சின்னங்கள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, சின்னங்கள் குழப்பம் குறித்து தாமதமாகப் புகார் தெரிவித்துள்ளதாகவும், இருப்பினும், பிற சின்னங்களில் இருந்து வேறுபடுத்தி அடையாளம் காணும் வகையில் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

மேலும், தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கக் கோரி மனுதாரர் அளித்துள்ள விண்ணப்பத்தின் மீது ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x