Published : 08 Mar 2021 03:54 PM
Last Updated : 08 Mar 2021 03:54 PM

அத்தியாவசியப் பணியில் உள்ள 8 லட்சம் தனியார் ஓட்டுநர்கள்; தபால் வாக்களிக்கக் கோரி வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பணி, அத்தியாவசியப் பணியில் ஈடுபடும் 8 லட்சம் தனியார் ஓட்டுநர்கள் வாக்களிக்க முடியாத நிலையில், அவர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் ஜூட் மேத்யூ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், “தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில், தேர்தல் அதிகாரிகளை அழைத்துச் செல்லவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்லவும் எனத் தேர்தல் பணிக்காகப் பயன்படுத்தப்படும், வாடகை வாகன ஓட்டுநர்களும், பால், குடிநீர், காய்கறிகள், பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களும் வாக்களிக்க முடியவில்லை.

நூறு சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு செயல்படும் தேர்தல் ஆணையம், வாக்களிக்க இயலாதவர்களை அடையாளம் கண்டு, அவர்களும் வாக்களிக்கச் செய்வதற்கு எந்த நடைமுறையும் இல்லை. வாகன ஓட்டுநர்களும் இந்தியக் குடிமக்கள் என்ற அடிப்படையில் வாக்களிக்கத் தங்களுக்குத் தகுதி உள்ளது. ஆனால், தேர்தல் மற்றும் அவசரப் பணி காரணமாக, 8 லட்சம் ஓட்டுநர்களால் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

தங்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தக் கோரி அளித்த மனுவைத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்காததால், வாடகை வாகன ஓட்டுநர்களும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில் தபால் வாக்கு வசதியை ஏற்படுத்தித் தர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், “தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாடகை வாகன ஓட்டுநர்கள் தனியார் ஊழியர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், வாடகை வாகன ஓட்டுநர்களை அடையாளம் கண்டு, தபால் வாக்களிக்க அனுமதிப்பது என்பது சாத்தியமில்லாதது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இது சம்பந்தமாக மனுதாரர் சங்கம், 2020 நவம்பர் 10-ம் தேதி அளித்த மனுவைப் பரிசீலித்துத் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x