Published : 08 Mar 2021 03:56 AM
Last Updated : 08 Mar 2021 03:56 AM

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: கரோனா அதிகரித்து வருவதால் நடவடிக்கை

கரோனா தொற்று அதிகரித்து வருவதால் குறிப்பிட்ட மாநிலங்களில்இருந்து தமிழகம் வருபவர்களுக்குஇ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள் ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுபாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், திருப்பூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகமாக காணப்படுகிறது. அதனால், கரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இ-பாஸ் நடைமுறையில் புதிய வழிகாட்டு நெறிமுகைளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. காய்ச்சல், இருமல்,சளி போன்ற கரோனா தொற்றுஅறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை தவிர்த்து, மற்ற அனைத்து மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கும் இ-பாஸ்’ கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும்அனைவருக்கும் விமான நிலையத்தில் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

புதிதாக 567 பேருக்கு வைரஸ் தொற்று

கரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று மொத்தம் 567 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 55 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 3,997 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் மூதாட்டி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 518 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா அண்மையில் கண்டறியப்பட்ட நிலையில், தமிழகத்துக்கு கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி முதல் தற்போது வரை பிரிட்டனில் இருந்து வந்த, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

அதில் 36 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேர் என மொத்தம் 56 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் 11 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சையால் குணமடைந்தனர். மேலும் 2 பேருக்கு புதிய தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x