Published : 21 Nov 2015 07:51 AM
Last Updated : 21 Nov 2015 07:51 AM

எழும்பூர் ரயில் நிலையத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்க புதிய பைப்லைன் அமைக்க திட்டம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் நிலத்தடியில் புதிய பைப்லைன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் சென்ட்ரலுக்கு அடுத்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் முக்கியமானதாக இருக்கிறது. பெரும்பான்மையான மாவட்டங்களுக்கு இங்கிருந்து விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, மேற்கு வங்கம், ஒடிசா என வெளி மாநிலங்களுக்கும் எழும்பூர் வழியாக பல்வேறு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, இந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘கனமழையினால் ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்ட தீவிர பணிகளால் சீரான ரயில் போக்குவரத்து வசதி அளிக்கப்பட்டது. ரயில்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், ரயில்கள் ரத்து செய்யப்படவில்லை. தற்போது, வழக்கமான ரயில்சேவை திரும்பியுள்ளது.

ரயில் நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக 7-வது நடைமேடையில் ஒரு எஸ்கலேட்டரும், 8 மற்றும் 9-வது நடைமேடை பகுதியில் ஒரு எஸ்கலேட்டரும் அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கனமழை காலங்களில் ரயில் பாதைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி விடுகிறது. இதனால், மோட்டார் பம்ப்கள் மூலம் நீர் வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்படுவதால், ரயில் சேவை பாதிக்கப்படுகிறது. எனவே, மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் நிலத்தடியில் புதிய பைப்லைன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் நிலையம் முன்பு ஒன்றாம் நடைமேடை அருகே மாநகராட்சி கால்வாயை இணைக்கும் வகையில் சுமார் 15 முதல் 25 மீட்டர் தூரத்துக்கு பைப்லைன் அமைக்க முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x