Published : 08 Mar 2021 03:57 AM
Last Updated : 08 Mar 2021 03:57 AM

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் மெட்ரோ ரயில்களில் பயணிக்க மக்கள் ஆர்வம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், மெட்ரோ ரயில்களில் பயணிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் எண்ணிகையை அதிகரிக்கும் வகையில், ரூ.10 முதல் ரூ.20 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டண சலுகையும் இருப்பதால், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையே, கோடை காலம் நெருங்கவுள்ளதால், வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், மெட்ரோ ரயில்களில் பயணிக்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “சென்னையில் மெட்ரோ ரயில்சேவை மூலம் மக்கள் விரைவாக செல்ல முடிகிறது. அண்ணாசாலையில் மாநகர பேருந்துகளுக்காக காத்திருக்கும் மக்கள் மெட்ரோ ரயில்களில் பயணிக்க தொடங்கிவிட்டனர். வெயில் காலம் தொடங்கவுள்ள நிலையில், ஏசியில் குறைந்த கட்டணத்தில் பயணிப்பது நன்றாக இருக்கிறது’’என்றனர்.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறும்போது, “கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மெட்ரோ ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கட்டணக் குறைப்புக்கு பிறகு பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

கோடை காலம் தொடங்கஉள்ளதால், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். பயணிகளின் தேவைக்கு ஏற்றார்போல், மெட்ரோ ரயில்களை இயக்க நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x