Last Updated : 08 Mar, 2021 03:57 AM

 

Published : 08 Mar 2021 03:57 AM
Last Updated : 08 Mar 2021 03:57 AM

தேர்தலுக்காக கட்சி மாறும் நிர்வாகிகள்; யார் எந்தக் கட்சி? - புதுச்சேரியில் நிலவும் புது குழப்பம்

புதுச்சேரி

சட்டப்பேரவை தேர்தலையொட்டி புதுச்சேரியில் கட்சி மாறும் நிர்வாகிகளால் யார் எந்தக் கட்சி என்பதில் குழப்பம் நிலவுகிறது.

புதுச்சேரியில் முன்பெல்லாம் எம்எல்ஏக்கள் கட்சி மாறியதால் ஆட்சி கவிழும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி உள்ளது. வெவ் வேறு கட்சியில் இணைந்து பதவிகளை பெற்று ஆட்சி புரிந்தோரும் உண்டு. சிலர் அனைத்து கட்சிகளிலும் சென்று ஒரு சுற்று அரசியல் பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.

சிறிய ஊரான புதுச்சேரியில் காலையில் கடுமையாக விமர்சித்துவிட்டு மாலையில் ஒன்றாக இணைந்து வாக்கிங் செல்லும் அரசியல்வாதிகள் பலருண்டு. பிரெஞ்சு ஆட்சியிலிருந்து புதுச்சேரி விடுபட்ட நாள் முதல் நீண்ட காலமாக காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. காங்கிரஸ் முதல்வர் பாரூக்மரைக்காயர் திமுகவிலும் முதல்வராக இருந்துள்ள விசித்திரங்களும் அரங்கேறி யுள்ளது.

தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சிக்கு வரும் முன்பே 1974-ல் அதிமுக, காங்கிரஸ் கூட் டணி வெற்றி பெற்று அதிமுகவை சேர்ந்த ராமசாமி முதல்வரானார். 1977-ல் அதிமுக வெற்றிபெற்ற பிறகு மீண்டும் ராமசாமி முதல்வரானார். ஆனால் இந்த ஆட்சி சொற்ப காலத்தில் கவிழ்ந்துவிட்டது.

அதிகளவில் கோஷ்டி பூசல், பிளவை சந்தித்த கட்சி காங்கிரஸ். தமிழகத்தில் மூப்ப னார் தமாகா தொடங்கியபோது கடந்த 2000-ல் முன்னாள் அமைச்சர் கண்ணன் புதுவை காங்கிரஸிலிருந்து வெளியேறி தமாகாவை தொடங்கினார். அப்போது காங்கிரஸில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது. பின்னர் மீண்டும் காங்கிரஸில் 2 முறை இணைந்து, விலகி புது கட்சிகளை துவக்கிய வரலாறும் உண்டு.

அதேபோல் கடந்த 2008-ல் முதல்வராக இருந்த ரங்கசாமியை பதவியிலிருந்து காங்கிரஸ் நீக்கியது. இதையடுத்து 2011 சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கி ஆட்சியையும் பிடித்தார். அப்போது காங்கிரஸில் இருந்து பலர் வெளியேறினர்.

தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நமச்சிவாயம், அவரை தொடர்ந்து தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் காங்கிரஸிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளனர். லட்சுமி நாரா யணன் என்ஆர் காங்கிரஸில் இணைந்துவிட்டார்.

திமுகவிலிருந்த வெங்கடேசனும் பாஜகவில் இணைந்துள்ளார். அதேபோல் காங்கிரஸிலிருந்த மல்லாடி கிருஷ்ணாராவ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு என்ஆர் காங்கிரஸூக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தற்போது தனிக்கட்சி நடத்தி வரும் முன்னாள் அமைச்சர் கண்ணன் பாஜக பக்கம் சாய்கிறார்.

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் விலகல்அதிகரித்ததால் நிர்வாகிகளின் எண்ணிக் கையை 90 ஆக உயர்த்தியும் பலர் வெளியேறுகின்றனர். அடுத்தகட்டமாக என்ஆர் காங்கிரஸிலிருந்தும் பாஜகவுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

இணையத்தில் அவர் இக்கட்சியில் இணைகிறார் என்ற தகவல் முதலில் வதந்தியாக பரப்பப்பட்டு கருத்துகளை அறிந்து பின்னர் இணைவோரும் அதிகரித்துள்ளனர். அதனால் யார் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. வேட்பு மனுத் தாக்கலுக்கு பிறகே யார் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பதை உறுதியாக கூற முடியும் என்ற நிலை புதுச்சேரியில் உருவாகியுள்ளது. இதுவும் அடுத்த தேர்தல் வரையில் தான். அதன்பிறகு அடுத்த தாவல் துவங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x