Last Updated : 07 Mar, 2021 08:30 PM

 

Published : 07 Mar 2021 08:30 PM
Last Updated : 07 Mar 2021 08:30 PM

தொகுதி முடிவாகும் முன்பு மதுரையில் பிரச்சாரத்தை தொடங்கிய பாஜக: அதிமுகவினர் அதிர்ச்சி

மதுரை

அதிமுக - பாஜக கூட்டணியில் இரு கட்சிகளும் எந்தெந்த தொகுதிகளி்ல் போட்டியிடுகின்றன என்ற விவரம் அறிவிக்கப்படாத நிலையில் மதுரை தெற்கு தொகுதியில் பாஜக மாநில துணைத் தலைவர் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 20 தொகுதிகள் எது, எது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. மதுரையில் மதுரை தெற்கு, மதுரை வடக்கு, மதுரை கிழக்கு தொகுதிகளை பாஜக கேட்டு வருகிறது. இதில் ஒரு தொகுதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதியில் பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.ஆர்.மகாலெட்சுமி இன்று திடீரென வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தார். இவர் தெற்கு தொகுதியில் போட்டியிட முடிவு செய்து கரோனா பாதுகாப்புக்காக முகக்கவசம், கையுரை வழுங்குவதாக இருந்தாலும் தெற்கு தொகுதியை சேர்ந்தவர்களுக்கே வழங்கி வருகிறார். தொகுதிகள் எண்ணிக்கை முடிவாகுவதற்கு முன்பே தெற்கு தொகுதியில் பாஜக தேர்தல் அலுவலகத்தை மாநிலத் தலைவர் முருகனை அழைத்து வந்து திறந்தார்.

இந்த சூழ்நிலையில் அவர் இன்று தொகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்சியினருடன் ஊர்வலமாக சென்ற அவர் வீடு வீடாக சென்று கை கூப்பி ஓட்டு சேகரித்தார்.

மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்த இடங்களில் மைக் பிடித்துப் பேசினார். பாஜக பிரச்சாரத்தால் தெற்கு தொகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து அவரது ஆதரவாளர் பொக்கிஷம் குமார் கூறுகையில், தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதை கன்னியாகுமரியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். மதுரை தெற்கு தொகுதியில் ஏ.ஆர்.மகாலெட்சுமி தொடங்கி வைத்து பரப்புரை மேற்கொண்டார் என்றார்.

மதுரை தெற்கு தொகுதியின் தற்போதை எம்எல்ஏ அதிமுகவைச் சேர்ந்த எஸ்.எஸ்.சரவணன். இவர் மீண்டும் மதுரை தெற்கு தொகுதியை கேட்டு வருகிறார். தற்போது சரவணன், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆதரவாளராக உள்ளார்.

இதனால் இந்த முறை சரவணனுக்கு மதுரை தெற்கு தொகுதியில் சீட் கொடுக்க அதிமுக நகர் மாவட்டச் செயலரும், அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ பரி்ந்துரைக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தெற்கு தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டால், அதில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் போட்டியிட வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x