Published : 07 Mar 2021 05:28 PM
Last Updated : 07 Mar 2021 05:28 PM

திமுக கூட்டணிக்கு ஆதரவு; ஒவைசியால் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

சென்னை

தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது. சிறிய கட்சிகளான தமிழக வாழ்வுரிமைக் கட்சி, எஸ்டிபிஐக்கும் திமுக கூட்டணியில் இடம் அளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இன்று காலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயற்குழுக் கூட்டம் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தலைமையில் மண்ணடி மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என மாவட்ட நிர்வாகிகள் இடத்தில் கருத்துக் கேட்பு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இ.த.ஜ தலைவர் எஸ்.எம்.பாக்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“தமிழகத்தில் பாசிசத்தை எதிர்த்து வீழ்த்த, தமிழக மக்களின் நலன் கருதியும், சமுதாய நலனை முன்னிறுத்தியும், ஓட்டுகள் சிதறக்கூடாது என்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்த முடிவு அடிப்படையில் ஆய்வு நடத்தினோம்.

அனைத்துக் கட்சிகள் குறித்தும் ஆய்வு செய்தோம். அமமுக குறித்தும் ஆய்வு செய்தோம். மய்யம் என்று ஒரு கட்சி இருக்கிறதல்லவா, கமல் பாவம். அவருக்கும் தானும் முதல்வர் என்று ஆசை வந்துள்ளது. அவரது கட்சி குறித்தும் ஆலோசித்தோம்.

பாமக, தமாகா நிலை என்ன? அனைத்தும் உருமாற்றப்பட்டுள்ளன. ஆகவே, எங்கள் ஒட்டுமொத்த ஆதரவு திமுக கூட்டணிக்கு. இந்தச் சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக திமுக தலைமையில் உள்ள கூட்டணியை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி என்றால் அந்தக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வெல்ல வேண்டும். அனைத்துத் தரப்பு மக்கள் வாக்குகளும் சிதறாமல் திமுக கூட்டணிக்குத் திரட்டுவதுதான் பாசிசத்தை வீழ்த்துவதாகும்.

மேலும், முஸ்லிம்கள் வாக்கு சிதறாமல் இருக்க திமுக, எஸ்டிபிஐ, மஜகவை அழைத்துப் பேசி அவர்களையும் இணைக்க வேண்டும். தனியரசு, கருணாஸ் போன்றோரையும் அழைத்து இணைக்க வேண்டும். ஓரு ஓட்டுகூட சிதறக்கூடாது.

பாசிசத்திற்கு எதிரான ஓட்டுகள் சிதறக் கூடாது என்பதற்காக திமுகவை ஆதரிக்கிறோம். அசாதுதின் ஓவைசியின், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சி தமிழகத்தில் போட்டியிடுவதால் உருதுவைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் அதிகம் வாழும் வாணியம்பாடி, வேலூர், ஆம்பூர் பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், திமுக கூட்டணியின் வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்காது.

ஏனென்றால் தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். நாங்கள் ஓட்டுமொத்தமாக எங்கள் ஆதரவைத் திமுக கூட்டணிக்கு அறிவித்துவிட்டோம். இதற்காக திமுக தலைவரைச் சந்திக்க வேண்டும் என்று சிலர் சொன்னார்கள். எங்கள் ஆதரவைத் தெரிவித்துவிட்டோம். நாங்கள் போய் இதற்காகச் சந்திக்கப் போவதில்லை. ஒருவேளை சந்திக்க அழைத்தால் மரியாதை நிமித்தமாக அந்தச் சந்திப்பு இருக்கும்.

மேலும், இவிஎம் மிஷின் விஷயத்தில் தேர்தலில் மிக கவனமாக இருக்க வேண்டும். மதியம் 3 மணிக்கு மேல் ஏஜெண்டுகளை வசப்படுத்தி வாக்குகளைக் குத்துவார்கள். ஆகவே, ஒரு மாதம் வாக்கு எண்ணிக்கைக்கு இடையில் இருக்கிறது. வாக்குச் சாவடிகள் விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும்.

பாஜக இங்கு பெரிய அளவில் வெல்ல முடியாது. அதிமுகவுடன் சேர்வதால் நோட்டாவுக்கு மேலே ஓட்டு வாங்குவார்கள் அவ்வளவுதான். ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?''

இவ்வாறு எஸ்.எம்.பாக்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x