Published : 07 Mar 2021 04:14 PM
Last Updated : 07 Mar 2021 04:14 PM

கரூர் அருகே ஜெ., இபிஎஸ் உருவப் படங்கள் அச்சிட்ட நோட்டுப் புத்தகங்கள் பறிமுதல்: சோதனை நடத்திய அலுவலருக்கு நோட்டீஸ்

கரூர்

கரூர் அருகே நோட்டுப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகப் பறக்கும் படை அலுவலருக்கு விளக்கம் கேட்டு கிருஷ்ணராயபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சணப்பிரட்டி காலனியில் அதிமுக சார்பில் கேசவன் என்பவர் வீட்டில் நோட்டுப் புத்தகங்கள் வைக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 5-ம் தேதி வந்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணராயபுரம் பறக்கும் படை அணி 3 குழு அலுவலர் மணிமேகலை தலைமையில் ஆய்வு நடத்தியதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் பழனசாமி, மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருவப்படங்கள் அச்சிடப்பட்ட 3,030 நோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றைப் பறிமுதல் செய்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பாக கிருஷ்ணராயபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர், கிருஷ்ணராயபுரம் பறக்கும் படை அணி 3 குழு அலுவலர் மணிமேகலைக்கு விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், சணப்பிரட்டி கேசவன் என்பவர் வீட்டில் ரூ.66,000 மதிப்புள்ள 3,030 நோட்டுப் புத்தகங்களைப் பறிமுதல் செய்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனிநபர் வீட்டுக்குச் சென்று சோதனை செய்ய நேரிடும்போது சோதனை செய்யும் அலுவலர் செலவினப் பார்வையாளருக்கும், வருமான வரித் துறையினருக்கும் உடனடியாகத் தகவல் தெரிவித்து, வருமான வரித்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. ஆனால், தாங்கள் மேற்கண்ட நடைமுறைகள் எதனையும் பின்பற்றாமல் தன்னிச்சையாக மேற்கண்ட நபரின் வீட்டிற்குள் சென்று நோட்டுப் புத்தகங்களைப் பறிமுதல் செய்துள்ளது தேர்தல் விதிகளுக்கு முற்றிலும் முரணானது ஆகும்.

எனவே, மேற்படி தேர்தல் விதிமுறைககளை மீறிச் செயல்பட்டுள்ளதால் தங்கள் மீது தேர்தல் விதிமுறைகளின்படி ஏன் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்பதற்கான விளக்கத்தினை இக்கடிதம் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்குமாறும், தவறும்பட்சத்தில் இது தொடர்பாக தங்களுக்கு கூறிக்கொள்ள காரணம் ஏதும் இல்லை எனக் கருதி தங்கள் மீது மேல் நடவடிக்கை தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை நடத்திய பறக்கும் படை அலுவலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x