மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் கையுறை: தூத்துக்குடி ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியை மாவட்டத் தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். | படம்: என்.ராஜேஷ்.
தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியை மாவட்டத் தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். | படம்: என்.ராஜேஷ்.
Updated on
1 min read

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக கையுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்டத் தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கி.செந்தில் ராஜ் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள புனித லசால் மேல்நிலைப்பள்ளி, காரபேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்திநகர் இந்து அரிசன தொடக்கப்பள்ளி, சண்முகபுரம் டிஎன்டிடிஏ நடுநிலைப்பள்ளி, ஹோலிகிராஸ் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்குப் போதிய இட வசதி, மாற்றுத்திறனாளிகள் வயதானவர்கள் வருவதற்கான சாய்தள வசதி, காற்றோட்ட வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் கி. செந்தில் ராஜ் நேரில் இன்று சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

”தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 104 மாவட்ட அளவிலான அலுவலர்களைக் கொண்டு இன்றைய தினம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி, மின்விளக்கு, மின்விசிறி வசதி, கரோனா காலகட்டமாக உள்ளதால் இரண்டு பக்கமும் காற்றோட்ட வசதி போன்றவை இருக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலாய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால், அவை உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் முதலில் 1,603 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது தேர்தல் ஆணையம் 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகளை இரண்டாகப் பிரிக்கச் சொன்னதன் அடிப்படையில் கூடுதலாக 494 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தற்போது மொத்தம் 2,097 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் பதற்றம் மற்றும் மிகப் பதற்றமான வாக்குச்சாவடிகள் 247 உள்ளன.

கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதால் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள எளிதாக இருக்கும். வாக்குப்பதிவு நேரமும் மாலை 6 மணி என்பது இரவு 7 மணி வரை ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பதற்கு முன்னதாக வாக்காளர்களுக்கு கையுறைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வாக்குச்சாவடி மையத்துக்குள் வரும் வாக்காளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் காவல்துறையினர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கரோனா தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”.

இவ்வாறு ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின் மற்றும் துணை வட்டாட்சியர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in