Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

ரயில்வேயில் ஓராண்டாக சலுகைக் கட்டணங்கள் ரத்து : முதியோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பயணிகள் பாதிப்பு

சென்னை

கரோனாவால் ரயில் சேவைகள் குறைக்கப்பட்டு சலுகைக் கட்டணங்களும் ரத்து செய்யப்பட்டன. ஓராண்டு ஆகியும் சலுகைக் கட்டணம் மீண்டும் வழங்காததால் முதியோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பயணிகள் பாதிக்கப்பட் டுள்ளனர்.

இந்திய ரயில்வேயில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுத் துறையில் பதக்கம்பெற்றவர்கள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரிகையாளர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 53 வகையினருக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. குறிப்பாக 58 வயது நிரம்பிய பெண்களுக்கு பயணக் கட்டணத்தில் 50 சதவீதமும், 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு பயணக் கட்டணத்தில் 40 சதவீதமும் சலுகை வழங்கப்படுகிறது. சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அவர்களைக் கவுரவிக்கும் வகையில் 100 சதவீத சலுகை வழங்கப்படுகிறது.

இதற்கிடையே, கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடுமுழுவதும் பயணிகள் ரயில்சேவை கடந்த ஆண்டு மார்ச் இறுதியில்நிறுத்தப்பட்டது. அப்போது, மேற்கண்ட 53 வகையான கட்டண சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன. ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு வழக்கமான பயணிகள் ரயில்சேவை தொடங்காத நிலையில் அதில் 70 சதவீத ரயில்கள் சிறப்பு ரயில்களாக தற்போது இயக்கப்படுகின்றன.

இவற்றில் பெரும்பாலான ரயில்களில் வழக்கமான கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சலுகை கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு ஓர் ஆண்டை நெருங்கும் நிலையில், அதுகுறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சலுகைகட்டண பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக எஸ்ஆர்எம்யு பொதுச் செயலாளர் என்.கண்ணையா கூறியதாவது:

ரயில்வேயில் பண்டிகை நாட்களில் இயக்கப்படும் ரயில்கள் தற்போது அதிகக் கட்டணத்தில் சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன. பல்வேறு வகையான சலுகைக் கட்டணங்களையும் இன்னும் செயல்படுத்தவில்லை. இது பயணிகளுக்கு பெரும் சுமையாக உள்ளது.குறிப்பாக, முதியோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பயணிகளின்நலன் கருதி இந்த சிறப்பு ரயில்களின்கட்டணத்தைக் குறைத்து, வழக்கமான பயணிகள் ரயில் கட்டணத்தில் இயக்க வேண்டும்.

மேலும், பல மடங்கு ரயில் கட்டணத்துக்கு வழிவகுக்கும் தனியார்ரயில்களை இயக்கும் திட்டத்தையும் மத்திய ரயில்வே துறை கைவிடவேண்டும். தனியார் ரயில்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் உதவியுடன் சிறப்புக் குழுக்கள் அமைத்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக திருநின்றவூர் ரயில் பயணிகள் பொது நலச்சங்கத்தின் செயலாளர் எஸ்.முருகையன் கூறும்போது, ‘‘தற்போது 80சதவீதம் ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன. ஆனாலும், சலுகை கட்டணங்களை மீண்டும் அமல்படுத்தவில்லை. இதனால், முதியோர், மாற்றுத் திறனாகிகள் உள்ளிட்டோர் அவதிப்படுகின்றனர். அதேபோல்,மின்சார ரயில்களில் பயணிகளுக்கான சீசன் டிக்கெட் குறித்தும் ரயில்வே அறிவிக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டையும் நீக்க ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வழக்கமான பயணிகள் சேவை தொடங்குவதற்கான அறிவிப்பை ரயில்வே வாரியம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு, சலுகைக் கட்டணம், சீசன் டிக்கெட் உள்ளிட்டவை குறித்து பயணிகளுக்கு தெரியப்படுத்துவோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x