Published : 06 Nov 2015 08:06 AM
Last Updated : 06 Nov 2015 08:06 AM

அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீருடன் ஆடாதோடை மணப்பாகு விநியோகம்: சித்த மருத்துவ அலுவலர்கள் சங்கம் தகவல்

அரசு மருத்துவமனைகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிலவேம்பு குடி நீருடன் ஆடாதோடை மணப்பாகு வழங்கப்படும் என்று தமிழ்நாடு சித்த மருத்துவ அலுவலர்கள் சங்கத் தலைவர் டாக்டர் எம்.பிச்சையாகுமார், டாக்டர் பி.தமிழ்க்கனி ஆகியோர் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:

டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சித்த மருந்தான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு கொடுக் கப்பட்டு வருகிறது. நிலவேம்பு குடிநீர் கசப்பாக இருப்பதால் சிறுவர்கள் குடிப்பதில்லை. ஒரு சிலருக்கு வாந்தியும் ஏற்படுகிறது. அதனால் நிலவேம்பு குடிநீருடன் இனிப்பான “ஆடாதோடை மணப்பாகு” கொடுக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நில வேம்பு குடிநீருடன், ஆடாதோடை மணப்பாகு இன்று முதல் வழங்கப்படுகிறது. நிலவேம்பு குடிநீர் குடித்து முடித்தவுடன் ஆடாதொடை மணப்பாகு கொடுக் கப்படுகிறது. ஆடாதோடை மணப்பாகு இனிப்பாக இருப்ப தால் சிறுவர்கள் விரும்பிக் குடிக்கின்றனர். ஆடாதோடை மணப்பாகு பெரியவர்களுக்கு 10 முதல் 20 மிலி, 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 5 முதல் 10 மிலி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2.5 முதல் 5 மிலி வழங்கப்படுகிறது. இதன் மூலம் உடலில் ரத்த தட்டணுக்கள் அதிகரிக்கும். உயிரிழப்புகள் தடுக்கப்படும்.

டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று நிலவேம்பு குடிநீருடன் சேர்த்து ஆடாதோடை மணப்பாகுவை குடிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x