Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடந்துவரும் 7-ம் கட்ட அகழாய்வில் பழங்காலப் பானை ஓடுகளின் குவியல் கண்டெடுக்கப்பட்டது.
கீழடியில் இதுவரை 6 கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது 7-வது கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல, கொந்தகை, அகரத்திலும் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை கீழடியில் மொத்தம் 9 குழிகள் தோண்ட அளவீடு செய்யப்பட்டு ஒரு குழி தோண்டும் பணி நடக்கிறது. இதில் 2 அடி ஆழத்தில் ஏற்கெனவே பாசிமணிகள், சில்லு வட்டு, பானை ஓடுகள் கிடைத்தன. மேலும் மணலால் ஆன கூம்பு வடிவ பாத்திரம், மண் மூடிகள் கிடைத்தன.
தற்போது 4 அடிக்கு மேலாக தோண்டிய நிலையில், பழங்கால பானை ஓடுகளின் குவியல்கள், கருங்கல் போன்ற அமைப்பும், கரித்துகள்களும் கிடைத்துள்ளன. தொடர்ந்து குழி தோண்டும்போது மேலும் பழங்காலப் பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியலாளர்கள் தெரிவித்தனர்.
கொந்தகையில் ஏற்கெனவே அகழாய்வுப் பணிகள் மேற்கொண்ட இடத்துக்கு கிழக்குப் பகுதியில் 2 குழிகள் தோண்ட அளவீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு பெரிய அளவில் ஒரு குழி தோண்டப்பட்டு வருகிறது. இதேபோல அகரத்திலும் குழி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
6-ம் கட்ட அகழாய்வில் ...
6-ம் கட்ட அகழாய்வில் இதுவரை தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், சூது பவளம், அகேட், அமெதிஸ்ட் மணிகள், சுடுமண்ணாலான ஆமை வடிவமைப்பு இடம் பெற்ற முத்திரைகளும் கிடைத்தன. மாட்டு இனத்தைச் சேர்ந்த விலங்கு ஒன்றின் விலா எலும்பு, எடைக்கற்கள், செங்கல் கட்டுமானங்கள், ஒரே முதுமக்கள் தாழியில் 10 எண்ணிக்கைகள் கொண்ட சிவப்பு நிற பானைகள் மற்றும் கறுப்பு சிவப்பு நிற பானைகள் கிடைத்தன.
ஏழுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள், நுண் கற்காலத்தைச் சேர்ந்த மெல் அழகு கத்திகள், நுண் கருவிகள் நீக்கப்பட்ட வெட்டு முகப்புடன் கூடிய செர்ட் வகை மூலக்கூறு, வழவழப்பு தன்மையுடைய கல் மழு கிடைத்தன.
300 மில்லி கிராம் எடையிலான தங்க நாணயம், கரிம மயமான நெல் மணிகள், செலடான் வகை சீன மண்பாண்ட ஓடு, புகைப்பான்கள் கண்டறியப்பட்டுள்ளன. 6-ம்கட்ட ஆய்வில் மூன்று உறைகிணறுகள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT