Published : 06 Mar 2021 08:53 PM
Last Updated : 06 Mar 2021 08:53 PM

யாழ்ப்பாணத்தில் உதயமானது இலங்கை பாரதிய ஜனதா கட்சி: ஆங்கிலத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பார்ட்டி; சிங்களத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பக்சய

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கை பாரதிய ஜனதாக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பு.

ராமேசுவரம்

யாழ்ப்பாணத்தில் இலங்கை பாரதிய ஜனதா கட்சி உதயமாகியுள்ளது. இலங்கையில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே தங்களின் முதல் பணி என சூளுரைத்துள்ளது.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் மட்டுமில்லாமல் இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் பாஜகவின் ஆட்சி அமைக்க அமித்ஷா திட்டமிடுவதாக திரிபுராவின் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில் கடந்த பிப்ரவரி மாதம் கூறியிருந்தார்.

திரிபுராவின் முதல்வர் பிப்லப் குமார் தேவ்வின் கருத்து சர்ச்சைக்குள்ளானது. இலங்கையின் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானதுடன் அரசியல் வட்டாரத்திலும் இது பேசு பொருளாக அமைந்திருந்தது.

இந்நிலையில், இலங்கை பாரதிய ஜனதா கட்சி எனும் பெயரில் அந்நாட்டில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இங்குள்ள பாஜகவுக்கும் அங்கு உதயமாகியுள்ள பாஜகவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனத் தெரிகிறது.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் (இன்று) சனிக்கிழமை நடைபெற்றது.

இலங்கை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் வி.முத்துசாமி இந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கை பாரதிய ஜனதா கட்சி, ஆங்கிலத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பார்ட்டி என்றும் சிங்களத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பக்சய என்று அழைக்கப்படும்.

இலங்கையில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் உள்ளன என்றாலும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் புறந்தள்ளிவிட்டு தங்களின் தனிப்பட்ட நோக்கங்களை முன்னிறுத்திய கட்சிகளாகவே அவை செயல்படுகின்றன. இதனால் தமிழ் மக்கள் மத்தியில் அந்தக் கட்சிகள் நிலையாக நிற்க முடியாவில்லை.

இலங்கை பாரதிய ஜனதா கட்சி மற்ற கட்சிகள் போல வாக்குறுதிகளை வழங்காமல் தமிழ் மக்களுக்கான கல்வி, பொருளாதார மேம்பாடு, விளையாட்டு கலாச்சார மேம்பாட்டுத் திட்டங்களில் கவனம் செலுத்தும்.

இலங்கை பாரதிய ஜனதா கட்சியின் சேவை ஒரு மதத்துக்கான சேவையாக மட்டும் இருக்காது அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் உயர்த்தும் கட்சியாக செயற்படும்.

இலங்கை பாரதிய ஜனதா கட்சியின் முதல் பணியாக தமிழ்க் கல்வி மாநாடு ஒன்றை நடத்தி நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தமிழ் பேசும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் ஒத்துழைப்பை தமிழ் மக்களிடம் கோருகிறோம்.

மேலும் இந்தியாவில் இயங்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தங்கள் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

இலங்கை பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக எம்.இந்திரஜித் என்பவரும் பொருளாளராக வீ. திலான் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தியக் கட்சி இலங்கையில் புதிதல்ல:

இந்தியாவில் உள்ள கட்சிகளின் பெயரில் இலங்கையில் கட்சி தொடங்குவது ஒன்றும் புதிதல்ல. இந்தியாவின் விடுதலை இயக்கமான காங்கிரஸின் செயல்பாடுகளைப் பார்த்து இலங்கை தேசிய காங்கிரஸ் என்ற கட்சி 1919ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மேலும் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தலைமையிலான இலங்கை சிவசேனை என்ற அமைப்பும் அங்குள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x