Published : 06 Mar 2021 06:14 PM
Last Updated : 06 Mar 2021 06:14 PM

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும்: சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி. கோரிக்கை

ஐந்து மாநிலத்திற்குத் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்துவது பொருத்தமாக இருக்காது. தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டிய தேவை உள்ளதால் அதற்கேற்ப நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் கூறியிருப்பதாவது:

"மார்ச் 8ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்ள இந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் எம்.பி.க்கள் ஈடுபடுவார்கள்.

இந்நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்துவது ஏதுவாக இருக்காது. ஆகவே, தற்போது கூட்டப்படும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மிக முக்கியமான நிதி மசோதா குறித்த விவாதங்களை மட்டும் நடத்திவிட்டு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும்".

இவ்வாறு பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x