Published : 06 Mar 2021 03:14 AM
Last Updated : 06 Mar 2021 03:14 AM

மீண்டும் அதிமுக ஆட்சியை அமைப்பதே பாஜகவின் குறிக்கோள்: பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி உறுதி

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை அமைப்பதே பாஜகவின் குறிக்கோள், என பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பாஜக தேர்தல் பிரச்சார ஊர்வலம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி பேசியதாவது:

தமிழகத்தின் நண்பர் யார், எதிரி யார் என்பதை புலப்படுத்தும் தேர்தலாக இந்த தேர்தல் நடக்கவுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளார். தமிழகத்திற்கு உண்மையான நண்பர்களாக, பிரதமர் மோடியும், அதிமுகவும் விளங்குகிறது. தமிழக நலனின் எதிரிகள் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தான். இந்து கடவுள்களை அவமதிக்கும் திமுகவை தோற்கடிக்க வேண்டும். தமிழகத்தில் நில அபகரிப்பு, ரவுடியிசம் இல்லாமல் இருக்க வேண்டுமானால் அதிமுக -பாஜகவிற்கு ஆதரவு தர வேண்டும், என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சி.டி.ரவி கூறியதாவது:

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றி பெற வைத்து, அதிமுக ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் முக்கிய குறிக்கோள். எங்களுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது முக்கியமில்லை.

எங்களது கூட்டணியில் அதிமுக பிரதானக் கட்சியாகும். அமமுக மற்றும் டி.டி.வி தினகரனின் பலம், பலவீனத்தை முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் நன்கு அறிவார்கள். அவர்கள் அனைத்தையும் சமாளித்து முடிவு எடுப்பார்கள். சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை கமல்ஹாசன் புரிந்து கொள்ள வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x