Published : 06 Mar 2021 03:14 AM
Last Updated : 06 Mar 2021 03:14 AM

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை: ரூ.12 லட்சம் ரொக்கம் பறிமுதல், கட்சிக் கொடிகள் அகற்றம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது உரிய கணக்குகள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.12 லட்சத்து 63 ஆயிரத்து 500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் கார்களில் இருந்த கட்சிக் கொடிகளும் அகற்றப்பட்டன.

கீழம்பி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அவர்களிடம் ரூ.4,00,400 ரொக்கம் இருந்தது. அவர்கள் சுற்றுலா வந்ததாகவும், காஞ்சிபுரத்தில் சில பொருட்களை வாங்க பணம் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தனர். அவர்களிடம் பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் அப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் அகிலா தேவி தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போதும் கர்நாடக மாநில வாகனம் ஒன்றில் இருந்து ரூ.3,77,100 பணம் கைப்பற்றப்பட்டது. அவர்களும் உரிய ஆவணங்களின்றி வந்ததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுபோல் சோமங்கலம்-தாம்பரம் சாலையில் தர்கா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஆட்டோவை மடக்கி சோதனையிட்டனர். அதில் ரூ.4,35,000 ரொக்கம் இருந்தது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இந்தப் பணத்தை எடுத்துச் செல்வதாக ஆட்டோவில் இருந்தவர்கள் தெரிவித்தனர். உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

சுங்குவார்சத்திரம் சோகண்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனையிட்டனர். அப்போது அங்கு வந்த கார் ஒன்றை மடக்கி சோதனையிட்டனர். அதில் ரூ.51 ஆயிரம் ரொக்கம் இருந்தது.

ஊழியர்கள் சிலருக்கு வழங்க வேண்டிய தொகை என்று காரில் வந்தவர்கள் தெரிவித்தனர். உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x