Last Updated : 05 Mar, 2021 04:47 PM

 

Published : 05 Mar 2021 04:47 PM
Last Updated : 05 Mar 2021 04:47 PM

தூத்துக்குடியில் பிசான நெல் அறுவடை தீவிரம்: பருவம் தவறிய மழையால் மகசூல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை

தூத்துக்குடி மாவட்டத்தில் பிசான நெல் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த ஆண்டு பருவம் தவறிய மழை காரணமாக மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசன பகுதியில் நடப்பாண்டில் 40 ஆயிரம் ஏக்கரில் பிசான நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 38 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த கூடுதலாக 2 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.

அறுவடை தீவிரம்

தற்போது மாவட்டத்தில் பிசான நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் தாமிரபரணி பாசனப் பகுதிகளான குரும்பூர், ஏரல், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த கடந்த சில நாட்களாக அறுவடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

நெல் அறுவடையைப் பொறுத்தவரை பெரும்பாலும் அறுவடை இயந்திரம் மூலமே நடைபெறுகிறது. ஆட்கள் பற்றா க்குறை காரணமாக ஆட்கள் மூலம் அறுவடை செய்யும் பணியைத் தற்போது பார்ப்பதே அரிதாக இருக்கிறது. அனைத்துப் பகுதிகளிலும் அறுவடை இயந்திரம் மூலமே அறுவடைப் பணிகள் நடைபெறுகின்றன.

இதற்காக சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அறுவடை இயந்திரங்கள் வந்துள்ளன. அறுவடை இயந்திரங்களுக்கு மணிக்கு ரூ.2200 கட்டணமாக வசூலிக்கின்றனர். கடந்த ஆண்டு ரூ.2,100 ஆக இருந்த கட்டணம் இந்த ஆண்டு ரூ.2,200 ஆக உயர்ந்துள்ளது.

மகசூல் குறைவு

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நேரத்தில் பெய்த காலம் தவறிய தொடர் மழை காரணமாக நெற்பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மகசூல் கடுமையாக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அத்திமரப் பட்டியைச் சேர்ந்த விவசாயி க.ஜெயக்குமார் கூறும்போது, ''இந்த ஆண்டு நெல் மகசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. பொங்கல் நேரத்தில் தொடர்ச்சியாகப் பெய்த காலம் தவறிய மழை காரணமாக நெல் வயல்களில் தண்ணீர் அதிகமாகத் தேங்கிப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மகசூல் குறைந்துள்ளது.

ஏக்கருக்கு 24 மூட்டை நெல், அதாவது 12 கோட்டை நெல் கிடைத்தால் அதனை ஒரு மேனி எனக் கூறுகிறோம். இந்த ஆண்டு ஒன்றரை மேனி வரை மகசூல் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஏக்கருக்கு 10 முதல் 15 மூட்டை நெல்தான் கிடைத்துள்ளது. நான் 2 ஏக்கரில் நெல் சாகுபடி செய்தேன். எனக்கு 18 மூட்டை நெல்தான் கிடைத்துள்ளது. மழையால் பாதிப்படையாமல் இருந்திருந்தால் 32 மூட்டை வரை கிடைத்திருக்கும். இந்த ஆண்டு வியாபாரிகள் ஒரு கோட்டை நெல் (140 கிலோ) ரூ. 2100-க்குத்தான் வாங்குகின்றனர். இதனால் இந்த ஆண்டு நெல் சாகுபடி செய்த பெரும்பாலான விவசாயிகளுக்கு நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x