Last Updated : 05 Mar, 2021 04:38 PM

 

Published : 05 Mar 2021 04:38 PM
Last Updated : 05 Mar 2021 04:38 PM

தூத்துக்குடியில் தேர்தல் பணியாற்றும் 18 ஆயிரம் பேருக்குக் கரோனா தடுப்பூசி: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கலந்து கொண்டார் | படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலில் பணியாற்றவுள்ள 18 ஆயிரம் அலுவலர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், காவல் துறையினருக்குக் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான கி.செந்தில் ராஜ் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்றவுள்ள அலுவலர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதேநேரத்தில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்களைக் கரோனா தடுப்பூசி போடக் கட்டாயப்படுத்தக்கூடாது என சில அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் தேர்தல் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் கலந்துகொண்டு கரோனா தடுப்பூசி எவ்வாறு போடப்படுகிறது, அது எவ்வாறு செயலாற்றுகிறது என்பது குறித்து விரிவாக எடுத்துக்கூறினார்.

இந்த விழிப்புணர்வு முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் சுமார் 100 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 12 ஆயிரம் அலுவலர்கள், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வருவாய் துறையினர் சுமார் 1800 பேர், ஊரக வளர்ச்சித் துறையினர் சுமார் 1300 பேர், காவல் துறையினர் சுமார் 3000 பேர் என மாவட்டம் முழுவதும் 16 ஆயிரம் முதல் 18 ஆயிரம் பேர் தேர்தல் பணியாற்றவுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு முகாம் முதல்கட்டமாக நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 20 மையங்களில் தினமும் 100 முதல் 200 பேர் வரை கரோனா தடுப்பூசி போடப்படும்''.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ஆலோசனைக் கூட்டம்

முன்னதாகத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக திருமண மண்டபங்கள், பெரிய கூட்ட அரங்குகள், தங்கும் விடுதிகள், அச்சகங்களின் உரிமையாளர்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்கள், வங்கி அதிகாரிகள், நகை அடகு கடை நடத்துவோர்களுடன் மாவட்டத் தேர்தல் அதிகாரியான ஆட்சியர் செந்தில் ராஜ் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் ஆட்சியர் பேசும்போது, ''வங்கி ஏடிஎம் மையங்களுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனங்களும் தணிக்கை செய்யப்படும். எனவே, உரிய ஆவணங்களுடன் வாகனங்களை அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.10 லட்சத்துக்கு மேல் பணப் பரிவரித்தனை செய்வோரை வருமான வரித்துறை மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அச்சகங்கள், பதாகை தயார் செய்வோர் உரிய அனுமதிக் கடிதம் இல்லாமல் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பதாகைகளைத் தயாரித்துக் கொடுக்கக்கூடாது. அனுமதி எண் இல்லாத பதாகைகள் அகற்றப்படும். தேர்தல் அதிகாரியின் அனுமதி இல்லாமல், திருமண மண்டபங்கள் மற்றும் பெரிய கூட்டரங்குகளில் கூட்டங்கள் நடத்தக் கூடாது

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சதீஷ்குமார், தேர்தல் வட்டாட்சியர் ரகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்'' என்று ஆட்சியர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x