Published : 05 Mar 2021 03:05 PM
Last Updated : 05 Mar 2021 03:05 PM

சென்னையில் பொது இடங்களில் போஸ்டர்கள், கட் அவுட்கள் அமைக்கக்கூடாது: மீறினால் நடவடிக்கை; மாவட்ட தேர்தல் அலுவலர் எச்சரிக்கை

சென்னை மாவட்டத்தில் அரசு, அரசு சார்ந்த கட்டிடங்கள், பொதுத் துறை கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், கட் அவுட்கள், விளம்பரப் பலகைகள், விளம்பரப் பதாகைகள், கொடி மற்றும் தோரணங்கள் அமைக்க கூடாது எனவும், மீறி அமைக்கப்பட்டால் அவை உடனடியாக அகற்றப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி ஆணையாளருமான கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (மார்ச் 5) வெளியிட்ட செய்தி வெளியீடு:

"எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ தங்களின் விளம்பரத்திற்கு ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற்றிருந்தாலும், அத்தகைய விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும் முறைகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு இருக்க வேண்டும்.

ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழுவானது ஒரு விளம்பரத்தில் இடம்பெற்றிருக்கும் வாசகங்கள் மற்றும் அவற்றை ஊடகங்களில் விளம்பரமாக வெளியிடுவதற்கான செலவினங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி வழங்கும்.

ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழுவால் சான்றளிக்கப்பட்ட விளம்பரங்களை காட்சிப்படுத்துவது சம்பந்தப்பட்ட மாநில/மாவட்ட/உள்ளாட்சிகளில் நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது என தேர்தல் நன்னடத்தை விதிகள் கையேட்டில் அத்தியாயம் 16.2 இல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மாவட்டத்தில், அரசு கட்டிடங்கள், பொதுத்துறை கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், கட் அவுட்கள், விளம்பரப் பலகைகள், விளம்பரப் பதாகைகள், கொடி மற்றும் தோரணங்கள் அமைப்பது கூடாது.

மாநில/மாவட்ட/உள்ளாட்சிகளில் உள்ள சட்ட நடைமுறையில் தனியார் இடங்களில் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், கட் அவுட்கள், விளம்பரப் பலகைகள், விளம்பரப் பதாகைகள், கொடி மற்றும் தோரணங்கள் அமைத்திருப்பின் சம்பந்தப்பட்ட சொத்தின்/இடத்தின் உரிமையாளர்களிடம் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் எழுத்துப்பூர்வமான முறையான முன் அனுமதி பெற்று அமைக்கலாம்.

இத்தகைய விளம்பரங்களில் ஒரு குறிப்பிட்ட நபரை தாக்கியோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்கியோ உணர்ச்சிகளை தூண்டும் விதமாக வாசகங்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது.

இத்தகைய விளம்பரங்களில் வேட்பாளரின் பெயரோ, புகைப்படமோ அல்லது வேட்பாளர் குறித்து ஏதேனும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தால் அதற்கான தயாரிப்பு செலவு மற்றும் அதை நிறுவுவதற்கான செலவினங்கள் வேட்பாளரின் தேர்தல் செலவினத்தில் சேர்க்கப்படும்.

குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் இத்தகைய விளம்பரங்கள் அமைப்பட்டுள்ள இடம்/கிராமம்/நகரம் மற்றும் செலவின விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் செலவினப் பார்வையாளர்களுக்கு 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மாநில/மாவட்ட/உள்ளாட்சி சட்ட நடவடிக்கைககள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்குட்பட்டு அரசியல் கட்சிகள்/வேட்பாளர்கள்/வேட்பாளர்களின் பிரதிநிதிகள் / ஆதரவாளர்கள் தங்களது சொந்த இடத்தில் யாருக்கும் இடையூறின்றி விளம்பரங்களை வேட்பாளரின் அனுமதியோடு அமைத்துக்கொள்ளலாம். அத்தகைய விளம்பரங்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலோ அல்லது பொது இடத்தில் இருந்தால் அல்லது குறிப்பிட்ட வேட்பாளரின் அனுமதியின்றி அமைக்கப்பட்ட விளம்பரங்கள் அமைத்த நபர்கள் மீது இந்திய தண்டைச் சட்டம் 1860, பிரிவு 171 H-ன்கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, சென்னை மாவட்டத்தில் அரசு, அரசு சார்ந்த கட்டிடங்கள், பொதுத் துறை கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், கட் அவுட்கள், விளம்பரப் பலகைகள், விளம்பரப் பதாகைகள், கொடி மற்றும் தோரணங்கள் அமைக்கக் கூடாது எனவும், மீறி அமைக்கப்பட்டால் அவை உடனடியாக அகற்றப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x