Last Updated : 05 Mar, 2021 03:15 AM

 

Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

30 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டி: தினேஷ் குண்டுராவிடம் காங்.நிர்வாகிகள் வலியுறுத்தல்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 30 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்றுகாங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

வரும் பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக கடந்த பிப்ரவரி 25-ம் தேதி கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர், திமுகபொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு,மகளிரணிச் செயலாளர் கனிமொழி ஆகியோருடன் முதல் கட்ட பேச்சு நடத்தினார். அதில் 18 தொகுதிகள் மட்டுமே தரமுடியும் என்று திமுக கூறியதால்எந்த முடிவும் ஏற்படவில்லை.

அதனைத் தொடந்து கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் நடத்திய இரு கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

காங்கிரஸுக்கு 24 தொகுதிகள் வரை தர திமுக முன்வந்துள்ளதாகவும், குறைந்தது 30 தொகுதிகள் வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் நேற்று மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தினார்.

“2011-ல் 63 தொகுதிகளை ஒதுக்கிய திமுக 2016-ல் 22 தொகுதிகளைக் குறைத்து 41தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியது. இப்போது 25-க்கும் குறைவான தொகுதிகளைப் பெற்றுக் கொண்டால் 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 5 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்படும். எனவே,30 தொகுதிகளுக்கு குறையாமல்பெறக் கூடாது” என்று பெரும்பாலான மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

“திமுகவுடன் 30 தொகுதிகளைப் பெற முடியாவிட்டால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டும்” என்று சில மாவட்டத் தலைவர்களும், மாநில நிர்வாகிகளும் வலியுறுத்தியதாக கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டத் தலைவர் ஒருவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x