

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்ததால், நீதித்துறை மற்றும் காவல்துறையை கடுமையாக விமர்சித்தது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா மீது பதிவு செய்த வழக்கில் ஏப். 27-க்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் 2018-ல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜாபோலீஸாரையும், நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக எச்.ராஜா மீது திருமயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்ததால் வழக்கு கைவிடப்பட்டது.
இந்நிலையில் எச்.ராஜா மீது திருமயம் போலீஸார் பதிவு செய்தவழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து எச்.ராஜா மீதான வழக்கில், 2 மாதத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இருப்பினும், இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து திருமயம் போலீஸார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது.
பின்னர், எச்.ராஜா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பான நீதிமன்ற உத்தரவை ஏப்.27-க்குள் நிறைவேற்ற வேண்டும். தவறினால் போலீஸார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, விசாரணையை ஏப். 27-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.