Published : 21 Nov 2015 05:52 PM
Last Updated : 21 Nov 2015 05:52 PM

குமரி மாவட்ட மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

இன்று உலக மீனவர் தினம் கொண்டாடப்படும் நேரத்தில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் தங்களின் நீண்டகால கோரிக்கைகள் நடப்பு ஆண்டிலாவது நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் தொடங்கி நீரோடி காலனி வரை 67 கி.மீ. தூரத்தில் 46 மீனவக் கிராமங்கள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளனர்.

மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கோரி பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில், உலக மீனவர் தினமான இன்று குமரி மாவட்ட மீனவ கூட்டமைப்பு சார்பில் இணையம் பகுதியில் அமையும் வர்த்தக துறைமுகத்தை எதிர்த்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.

மீனவர்கள் மாயம்

கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அடிக்கடி மாயமாவதும், சிறை பிடிக்கப்படுவதும் தொடர்கதையாகி விட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 170-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகியுள்ளனர்.

கடலில் மீன்பிடிக்கச் சென்று 7 ஆண்டுகள் வரை காணாமல் போனவரை உயிரிழந்தவராக கருத வேண்டும் என சட்டம் இருந்தும் அரசும், மீன்வளத்துறையும் இதை அமல்படுத்துவதில்லை. இதன் காரணமாக காணாமல்போன மீனவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

காணாமல்போன மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க வசதியாக குளச்சலிலும், கன்னியாகுமரியிலும் தலா ஒரு விரைவு இயந்திரப் படகை தயார்நிலையில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர்களைத் தேடி கண்டுபிடிக்க கன்னியாகுமரியில் நிரந்தரமாக ஒரு ஹெலிகாப்டர் வசதி வேண்டும். இதுபோன்று பல்வேறு கோரிக்கைகளை தெற்கு எழுத்தாளர்கள் இயக்கம் மற்றும் பல்வேறு மீனவ அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது தவிர, மணவாளக்குறிச்சி அரிய வகை மணல் ஆலை, கடற்கரை ஒழுங்காற்று சட்டம் ஆகியவற்றாலும் குமரி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தனி அமைச்சகம் தேவை

சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டனி கூறும்போது, “தமிழக மீனவர்கள் இந்தியாவின் எப்பகுதியிலும் சென்று சுதந்திரமாக மீன்பிடிக்கவும், தாங்கள் பிடித்த மீன்களை விற்கவும், அவசர தேவைக்கு பிற மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் கரை ஒதுங்கவும் உரிமை வேண்டும்.

புதிதாக தேசிய ஒருங்கிணைந்த மீன்பிடிக் கொள்கையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசில் மீனவர்கள் நலனுக்கென தனி அமைச்சகம், மீனவர்களுக்கு சர்வதேச அடையாள அட்டை, கடலோர நாடுகளுடன் நல்லிணக்க ஒப்பந்தம், இந்திய சாட்சியம் சட்டப் பிரிவு 108-ல் திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆழ்கடலில் விசைப்படகுகள் மூழ்கி மாயமாகும் மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x