Last Updated : 03 Mar, 2021 08:37 PM

 

Published : 03 Mar 2021 08:37 PM
Last Updated : 03 Mar 2021 08:37 PM

சட்டப்பேரவைத் தேர்தல் பணி தொடர்பாக கோவை, திருச்சூர், பாலக்காடு மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைந்த ஆலோசனை

கோவை

சட்டப்பேரவைத் தேர்தல் பணி தொடர்பாக, கோவை, திருச்சூர், பாலக்காடு மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்ட, ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் இன்று (3-ம் தேதி) நடந்தது.

தமிழகம் மற்றும் கேரளாவில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே தேதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுவதை தடுக்க, தேவையான நடவடிக்கையை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு.ராசாமணி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்களை கண்டறியவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் போன்றவற்றை அளிப்பதை தடுத்திடவும், முறையாக கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளவும் 30 பறக்கும்படைகள், 30 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆலோசனை

கோவை மாவட்டத்தை ஒட்டி கேரளா மாநிலம் அமைந்துள்ளது. கேரளா மாநிலத்தின் பாலக்காடு, திருச்சூர் ஆகிய மாவட்ட எல்லைகள் கோவையின் எல்லையில் அமைந்துள்ளன. ஒரே தேதியில் தேர்தல் நடப்பது, அருகருகே எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது போன்ற காரணங்களால், தேர்தல் நடத்தை விதிகளை முறையாக கடைபிடிப்பது தொடர்பாகவும், தேர்தலுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கோவை, பாலக்காடு, திருச்சூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் நடந்திய ஒருங்கிணைந்த கலந்தாலோசனைக் கூட்டம், பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகேயுள்ள கூட்டரங்கில் இன்று (3-ம்தேதி) நடந்தது. மாவட்ட ஆட்சியர்கள் கு.ராசாமணி (கோவை), முருன்மாய் ஜோஷி(பாலக்காடு), எஸ்.சனவாஸ்(திருச்சூர்) ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டக் காவல் கணகாணிப்பாளர்கள் அர.அருளரசு (கோவை), விஸ்வநாத் (பாலக்காடு), பூங்குழலி(திருச்சூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டம் தொடர்பாக, மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது,‘‘ கேரள மாநிலத்தின் எல்லையோரத்தில் உள்ள கோவை மாவட்டத்தின் சோதனைச் சாவடிகளான வாளையார், முள்ளி, மேல்பாவியூர், வேலந்தாவளம், வீரப்பக் கவுண்டனூர், கோபாலபுரம், மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, ஆனைக்கட்டி ஆகிய 9 சோதனைச் சாவடிகளில் சோதனைகளை தீவிரப்படுத்தவும், தேர்தல் பரிசுப் பொருட்கள் பரிமாற்றம், பணம் மற்றும் மதுபானங்கள் எடுத்துச் செல்வதை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தேர்தல் ஆதாயத்துக்காக அதிக எண்ணிக்கையிலான பொருட்களை வாங்குபவர்களின் விவரங்கள பகிர்ந்து கொள்தல், சந்தேகத்துக்கு இடமான வகையில் எல்லைகளை கடந்து செல்லும் வாகனங்கள் தொடர்பான விவரத்தை உடனடியாக தெரிவித்தல் உள்ளிட்டவை குறித்தும் சுமூகமான முடிவு மேற்கொள்ளப்பட்டது. பிரதான சோதனைச் சாவடிகள் மட்டுமல்லாது, பல்வேறு வழிகளில் எல்லையினை கடக்கும் வழிகளை கண்காணிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

தீவிர கண்காணிப்பு

தனிநபர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக தொகை எடுத்துச் சென்றாலோ, விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றாலோ உடனடியாக பறிமுதல் செய்து, அதன் தகவலை அந்தந்த மாநில கட்டுப்பாட்டு அறை அல்லது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை விநியோகித்தால் உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுத்தல், தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக பெறப்படும் புகார்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைளை பகிர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தேவைப்பட்டால் இதுபோன்ற கூட்டங்களை தொடர்நது நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது,’’ என்றனர்.இக்கூட்டத்தில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x