

வாக்குப்பதிவு நாள் வரை தினமும் 1.5 லட்சம் பாண்லே பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்படுகிறது.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பலத்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மக்களுக்கு தேர்தல் குறித்தும், வாக்குப்பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குகளை பதிவு செய்வது எப்படி எனவும் செயல்முறை விளக்கத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாண்லே பால் பாக்கெட்டுகளில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை அச்சிட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
இது குறித்து, பாண்லே மேலாண் இயக்குநர் சுதாகர் வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் குறிப்பில், "தேர்தல் நாள் வரை தினமும் பாண்லே பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்படும். சராசரியாக 1.5 லட்சம் பால் பாக்கெட்டுகளில் வாசகங்கள் அச்சிடப்படும். அதில், 'தவறாமல் வாக்குப்பதிவு செய்யவும்', 'உங்கள் வாக்கு உங்கள் குரல்', 'சிந்தித்து வாக்களியுங்கள்', 'வாக்களிக்க பணம், பொருள் வாங்குவது குற்றம்', 'தேர்தல் புகார்களுக்கு 1950' என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.