Last Updated : 03 Mar, 2021 05:48 PM

 

Published : 03 Mar 2021 05:48 PM
Last Updated : 03 Mar 2021 05:48 PM

கடன் காப்பீட்டு திட்டத்தில் மோசடியில் ஈடுபடும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள்: ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

கடனுக்கான காப்பீடு திட்டத்தில் மோசடியில் ஈடுபடும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு தொடர்பாக ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையைs சேர்ந்த ஜோதி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது கணவர் மணி, கடந்த 2018-ல் வங்கி சாரா தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.6 லட்சம் கடன் வாங்கினார். அந்தg கடனுக்காக தனி காப்பீடும் எடுக்கப்பட்டிருந்தது. காப்பீடு ஆவணங்களை நிதி நிறுவனம் வழங்கவில்லை. கடனுக்கான தவணை தொகையை முறையாக செலுத்திய நிலையில் என் கணவர் உடல் நலக்குறைவால் இறந்தார்.

கடனுக்கு தனிக் காப்பீடு எடுக்கப்பட்டிருப்பதால் கடன் தொகை சரி செய்யப்படும் என நினைத்தோம். ஆனால், கடனுக்காக ரூ.5.48 லட்சத்தை செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வந்தது. கடனை திரும்ப செலுத்தாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
ஆவணங்களை சரிபார்த்த போது கடன் வாங்கிய என் கணவர் பெயரில் காப்பீடு செய்யாமல், என் மகன் பாலசுப்பிரமணியன் பெயரில் காப்பீடு செய்துள்ளனர்.

இது மோசடியாகும். மேலும், அடமான கடனுக்கு 22 சதவீத வட்டியும், தவணை தவறிய கடனுக்கு 36 சதவீத வட்டியும் வசூலிக்கின்றனர். கந்து வட்டி தடை சட்டத்தில் 9 முதல் 12 சதவீதம் வட்டி மட்டுமே வசூலிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதை மீறி 36 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றனர். எனவே கடன் தொகையை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிட்டார். பின்னர் மனு தொடர்பாக ரிசர்வ் வங்கி, காப்பீடு திட்ட ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் கடன் வழங்கிய நிதி நிறுவனம் ஆகியன பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப். 6-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x