

இதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை, அண்மையில் பாஜகவில் இணைந்த குஷ்பு விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கடந்த சில நாட்களுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியில் மாணவ, மாணவியர்களுடன் நடந்த கலந்துரையாடலின்போது ஜூடோ, நடனம், தண்டால் என உற்சாகமாகப் பங்கேற்றார்.
மாணவிகள் சிலரை மேடைக்கு அழைத்து அவர்களுடன் கைகோத்த ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, காங்கிரஸ் கமிட்டி தமிழகப் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் ஆகியோரையும் அழைத்து அனைவருடனும் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார்.
அதைத்தொடர்ந்து தன்னுடன் தண்டால் எடுக்க யாராவது தயாரா? என ராகுல் கேட்டதும், மாணவி ஒருவர் மேடைக்கு வந்தார். அவருடன் போட்டி போட்டு ராகுல் காந்தி தண்டால் எடுத்தார். பின்னர் ஒரு கையாலும் தன்னால் தண்டால் எடுக்கத் தெரியும் எனக் கூறியவாறு அவர் தண்டால் எடுத்தார். இதுதொடர்பாக வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில் இந்த செயல்கள் எல்லாம் நல்ல தலைமைக்கு அழகா என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை குஷ்பு விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலியில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஒரு தலைவர் மக்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும் என்பதைத்தான் சொல்ல வேண்டும். மீனவர்களுடன் தண்ணீரில் குதித்து நீச்சல் அடிப்பதோ, 10-ம் வகுப்புப் படிக்கும் பள்ளி மாணவரிடம் குஸ்தி செய்வதோ ஒரு தலைவருக்கு நல்லதில்லை.
ஒரு தலைவராக நீங்கள் (ராகுல் காந்தி) என்ன மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றி பெற்றால் இப்படித்தான் பள்ளி மாணவரிடம் குஸ்தி செய்வீர்களா, தண்டால் எடுப்பீர்களா இல்லை மீனவர்களோடு சேர்ந்து தண்ணீரில் குதிப்பீர்களா?
நீங்கள் என்ன நலத் திட்டங்களைக் கொண்டு வர முடியும் என்பதை ஆதாரபூர்வமாகச் சொல்லுங்கள். அதுதான் ஒரு தலைவருக்கு அழகு'' என்று குஷ்பு தெரிவித்தார்.