Published : 03 Mar 2021 01:28 PM
Last Updated : 03 Mar 2021 01:28 PM

சைக்கிள் சின்னத்தை மீட்க 12 தொகுதி கேட்ட தமாகா: 10 நிமிடத்தில் முடிந்த பேச்சு வார்த்தை

அதிமுக-தமாகா பேச்சுவார்த்தை தொடங்கி 10 நிமிடத்தில் முடிந்து விட்டது. சைக்கிள் சின்னத்தை மீட்க 12 தொகுதி வேண்டும் என்று கேட்டதாக தமாகா தரப்பில் தெரிவித்தனர்.

அதிமுக கூட்டணியில் பாமக மட்டுமே தொகுதியை இறுதி செய்த நிலையில் பாஜக, தேமுதிக இழுபறியில் உள்ளது. பாமகவை விட பாஜக அதிக தொகுதிகளை கேட்பதால் இழுபறி உள்ளது. பாஜக வாங்கிய அதே அளவு வாக்கு சதவீதம் பெற்றுள்ள நாங்கள் அதே அளவு தொகுதியை பெறாமல் ஓயமாட்டோம் என தேமுதிக தரப்பில் பிடிவாதம் பிடிக்க இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில் நான்காவது முக்கிய கட்சியான தமாகாவுடன் இன்று பேச்சு வார்த்தை தொடங்கியது, தமாகா தரப்பில் நிர்வாகிகள் கோவைத்தங்கம், வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணியுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இன்று நடந்த முதல்கட்ட பேச்சு வார்த்தையில் தமாகா சார்பில் நடந்த பேச்சு வார்த்தை 10 நிமிடங்கள் மட்டுமே நடந்த நிலையில் 12 தொகுதிகளை கேட்டதாகவும் முதல்வரிடம் பேசி நாளை பொதுச் செயலாளர் வாசனிடம் தெரிவிப்பதாக அதிமுக தரப்பில் தெரிவித்ததாக கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணைச் செயலாளர் கோவைத்தங்கம் கூறியதாவது:

“எங்கள் கோரிக்கை 2001-ல் தலைவர் மூப்பனார் பெற்றுத்தந்த சைக்கிள் சின்னத்தை பெற 12 தொகுதிகள் எங்களுக்கு தேவைப்படுகிறது. 12 தொகுதிகள் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தோம். சைக்கிள் சின்னம் கிடைத்தால் தமாகா வெற்றிப்பெற வசதியாக இருக்கும் என்று தெரிவித்தோம்.

உங்கள் கருத்தை முதல்வர், துணை முதல்வரிடம் தெரிவித்து வேண்டிய பதிலைப்பெற்று ஜி.கே.வாசனிடம் தெரிவிப்பதாக பதில் அளித்தார்கள். சைக்கிள் சின்னத்தை மீட்க எங்களுக்கு 12 தொகுதிகள் வேண்டும் அதை அவர்களிடம் தெரிவித்துவிட்டு வந்துள்ளோம்”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x