Published : 03 Mar 2021 03:22 AM
Last Updated : 03 Mar 2021 03:22 AM

பொதுமக்கள் ‘104’ என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்; கரோனா தடுப்பூசிக்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை

தனியார் மருத்துவமனைகள் கரோனா தடுப்பூசிக்கு அரசு நிர்ணயித்துள்ள ரூ.250 கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து ‘104’ என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க கோவிஷீல்டு, கோவேக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், காவல், உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 45வயது முதல் 59 வயது வரையுள்ளஇணைநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த 1-ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 529 அரசு மருத்துவமனைகளிலும், 761 தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு ரூ.150-ம் மற்றும் சேவைக் கட்டணம் ரூ.100 என மொத்தம் ரூ.250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார்மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறிஅதிகமாக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியதாவது: முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. பொதுமக்களுக்காக கோவின் 2.0 (COWIN 2.0) செயலிஉருவாக்கப்பட்டுள்ளது. அந்த செயலியில் பதிவு செய்தும் தடுப்பூசி போட வரலாம்.

பதிவு செய்யத் தெரியாதவர்கள் ஆதார் அட்டை, ஓய்வூதிய அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை எனஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் அருகில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு சென்றால், அங்குள்ளவர்கள் செயலியில் பதிவு செய்து தடுப்பூசியை போடுவார்கள். இணை நோய் பாதிப்புள்ளவர்கள் மட்டும் மருத்துவரின் சான்றிதழுடன் வரவேண்டும்.

தனியார் மருத்துவமனைகள், அரசு நிர்ணயித்துள்ள ரூ.250 கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி எந்த தனியார்மருத்துவமனையாவது கூடுதல்கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் ‘104’ என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x