Published : 03 Mar 2021 03:23 AM
Last Updated : 03 Mar 2021 03:23 AM

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் செயற்கைக் கோள் படங்களை பதிவேற்ற வேண்டும்: ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், அவற்றின் செயற்கைக் கோள்புகைப்படங்களை எடுத்து, இணையதளங்களில் பதிவேற்றம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்ஈரோடு மாவட்டத்தில் பெரும்பள்ளம் ஓடையின் இருபுறமும் ரூ.112 கோடி செலவில் சுவர் எழுப்ப தடை விதிக்கக் கோரி இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ளம் ஓடை பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருபுறமும் சுவர் எழுப்புவதால் ஓடையின் அகலம் சுருங்கி, தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே சுற்றுச்சுவர் கட்டுமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரித்தது. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், அனைத்து தாலுகாக்களிலும் உள்ள நீர்நிலைகளின் செயற்கைக் கோள் புகைப்படங்களை எடுத்து, மார்ச் 17-ம் தேதிக்குள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த புகைப்படங்களின் தொகுப்பை தலைமைச் செயலர், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு அனுப்பவும் உத்தரவிட்டனர்.

இடிக்க வேண்டும்

பெரும்பள்ளம் ஓடையில் சுவர்கட்டுவதை பொருத்தவரை, நீர்வழிப் பாதையில் குறுக்கீடு ஏற்படும் வகையில் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது. நீரோட்டத்துக்கு தடை ஏற்படுத்தும் கட்டுமானங்களை இடிக்க வேண்டும்என்று அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x