

பாம்பன் சாலைப் பாலத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
மண்டபம் துணை மின் நிலை யத்தில் இருந்து பாம்பன் சாலைப் பாலத்தின் இருபுறம் உள்ள நடைபாதைகளில் பதிக்கப்பட்டுள்ள மின்வயர்கள் மூலம் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.
மேலும் பாம்பன் சாலைப் பாலத்தில் உள்ள மின் விளக்குகளுக்கான வயர் இணைப்புகளும் பதிக்கப்பட்டுள்ளன. தொலைபேசி, பிராட்பேண்ட் இணையதள பைபர் வயர்களும், காவிரி கூட்டுக்குடிநீர் குழாயும் உள்ளன. இந்நிலையில் பாம்பன் சாலைப் பாலத்தின் வடக்கு நடைபாதையில் பதிக்கப்பட் டிருந்த மின் விளக்குகளுக்கான வயர்களில் மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது.
உடனே பாலத்தில் நின்றிருந்த மீனவர்கள் மண்டபம் துணை மின் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். ராமேசுவரம் தீவு முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. மின்கசிவை சரிசெய்தபிறகு தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.