Last Updated : 02 Mar, 2021 05:39 PM

 

Published : 02 Mar 2021 05:39 PM
Last Updated : 02 Mar 2021 05:39 PM

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அல்லாமல் வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரவேண்டும்: சரத்குமார்

தமிழகத்தில் திராவிட கட்சிகள் அல்லாமல் வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரவேண்டும் என சமக தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் தூத்துக்குடியில் நாளை (மார்ச் 3) நடைபெறுகிறது. சரத்குமார் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி மூன்றாவது அணிக்கு முயற்சி செய்து வரும் நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுவதால் அது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் தூத்துக்குடியில் நாளை (மார்ச் 3) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக தூத்துக்குடி அருகேயுள்ள மறவன்மடம் பகுதியில் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழுக் கூட்டத்தில், மகளிரணி செயலாளர் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். மேலும், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் 1800 பேருக்கு இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் இன்று பிற்பகல் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர். தொடர்ந்து பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. கட்சி எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். ஏற்கனவே சில அரசியல் முடிவுகளை எடுத்துள்ளோம். அதில் உள்ள முன்னேற்றம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

அதிமுகவோடு 10 ஆண்டுகள் கூட்டணி வைத்திருந்தோம். இதனால் எந்த தேர்தலையும் முழுமையாக சந்திக்க முடியாமல் போய்விட்டது. எங்களுடைய வாக்கு சதவீதம் என்ன என்பதே தெரியாமல் போய்விட்டது. எனவே, இந்த முறை சீட்டுக்காக யாரிடமும் நிற்க வேண்டாம். தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூறியதன் அடிப்படையில் அதை நோக்கி பயணித்து வருகிறோம்.

நாங்கள் உருவாக்கும் பிரதான அணி வெற்றி பெறலாம். தமிழகத்தில் திராவிட கட்சிகள் அல்லாமல், வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரவேண்டும். அதுவே எங்கள் பிரதான கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை வரலாம். நாங்கள் அமைப்பது மூன்றாவது அணி அல்ல, பிரதான அணி. இந்த பிரதான அணியை அமைக்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறோம். இப்போதைய நிலையில் விஜயகாந்த் எங்கள் அணிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். இந்த விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும். ராதிகா உள்பட கட்சி நிர்வாகிகள் யார், யார் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்தும் முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சரத்குமார் தற்போது அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளார். மேலும், மூன்றாவது அணியை அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக சசிகலா, கமல்ஹாசன் உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேசியுள்ளார்.

இந்நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதால், கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x