Last Updated : 02 Mar, 2021 05:48 PM

 

Published : 02 Mar 2021 05:48 PM
Last Updated : 02 Mar 2021 05:48 PM

காரைக்காலில் பால் பாக்கெட்டுகள் வாக்காளர் விழிப்புணர்வு வாசகத்துடன் விற்பனை: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

காரைக்காலில் கூட்டுறவு பால் சொசைட்டி மூலம் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்களுடன் பால் பாக்கெட்டுகள் விற்பனையை காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான அர்ஜூன் சர்மா இன்று தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவின் அவசியத்தை வலியுறுத்தி, 'ஸ்வீப்' அமைப்பு மூலம் வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதன் முதல் நிகழ்வாக, காரைக்கால் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மற்றும் 'ஸ்வீப்' அமைப்பின் சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகள் விற்பனையை, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா இன்று (மார்ச் 2) தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காரைக்காலில் 'ஸ்வீப்' அமைப்பு மூலம் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி, கையெழுத்து இயக்கம், குறுந்தகவல் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாள்தோறும் 30 ஆயிரம் பால் பாக்கெட்டுகள் விற்பனைக்குச் செல்கின்றன. இவற்றில் அச்சிடப்பட்டுள்ள வாசகம், வாக்காளர்களை நிச்சயம் சென்றடையும் என நம்புகிறோம்.

காரைக்கால் மாவட்டத்தில் 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லைப் பகுதியில் உள்ள 9 சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள பகுதிகளில் வாக்குச்சாவடிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாவட்டத்தில் 71 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு 234 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.

துணை மாவட்ட ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், பால் உற்பத்தியாளர் ஒன்றிய நிர்வாகி எம்.குமாரசாமி, 'ஸ்வீப்' அலுவலர் ஜே.ஷெர்லி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x