Published : 02 Mar 2021 05:46 PM
Last Updated : 02 Mar 2021 05:46 PM
அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திருப்பதியில் இன்று சாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துக் களம் கண்டு, ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் பாமகவுக்கு 23 இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அடுத்ததாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் கேட்கும் தொகுதியைக் கொடுக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் வலியுறுத்தப்படுவதாகத் தகவல் வெளியானது.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஓரிரு நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் எல்.முருகன் திருப்பதியில் இன்று சாமி தரிசனம் செய்தார்.
சிறப்பு தரிசனம் செய்த முருகனுக்கு, தேவஸ்தான அதிகாரிகள் சிறப்புப் பிரசாதங்களை வழங்கினர். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள், அதிமுக உடனான தொகுதிப் பங்கீடு குறித்துக் கேள்விகளை எழுப்ப முயன்றனர். எனினும் பேட்டியளிக்க மறுத்த எல்.முருகன், தமிழகம் திரும்பினார்.
இதற்கிடையே அதிமுக - பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடிக்கிறது.
முன்னதாக, வேல் யாத்திரை தடையின்றி நடைபெற வேண்டுமென எல்.முருகன், திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT