Last Updated : 02 Mar, 2021 04:46 PM

 

Published : 02 Mar 2021 04:46 PM
Last Updated : 02 Mar 2021 04:46 PM

மதுரையில் ராமர் கோயில் நிதி வசூல் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்காதது ஏன்?- உயர் நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம்

மதுரையில் ராமர் கோயில் நிதி வசூல் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்காதது ஏன்? என உயர் நீதிமன்றத்தில் மதுரை மாநகர் காவல் ஆணையர் விளக்கம் அளித்தார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட நூறு வார்டுகளில் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் ரத யாத்திரை மூலம் பொதுமக்களிடம் நிதி வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த யாத்திரைக்கு போலீஸார் அனுமதி மறுத்ததால் அறக்கட்டளையின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.செல்வகுமார் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து ரத யாத்திரைக்கு அனுமதி வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார்.

அதன் பிறகும் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்காததால் மதுரை மாநகர் காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதனிடையே ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாநகர் காவல் ஆணையர் சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மதுரை மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும், மதக் கலவரத்தை தூண்டும் விதமான பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், கட்சி மற்றும் கட்சி சாராத அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தற்போது கரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. இதனால் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்குவதால் பாதிப்பு ஏற்படும். பிப். 19-ல் கரிமேடு பகுதியில் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அனுமதியில்லாமல் ரத யாத்திரை மேற்கொண்டதால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், பொங்கல் பண்டிகையின் போது சிலர் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடிய இடத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து பாஜக அலுவலகத்தில் தாக்குதல் நடைபெற்றது. இந்தச் சூழலில் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் மத மோதல்கள் நிகழ வாய்ப்புள்ளது என்றார்.

இதையடுத்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமதிக்கப்படும் வழித்தடத்தில் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியுமா? என்பது குறித்து போலீஸார் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x