Published : 02 Mar 2021 04:38 PM
Last Updated : 02 Mar 2021 04:38 PM

'வெற்றி நடைபோடும் தமிழகம்' விளம்பரத்துக்கு எதிரான திமுக வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

அரசு செலவில் விளம்பரம் வெளியிடும் ஆளும் கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, திமுக கொடுத்த மனு மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில், அதிமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு, 'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற தலைப்பில், பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடப்படுகிறது.

இந்த விளம்பரங்களுக்குத் தடை விதிக்கக் கோரி திமுக சார்பிலும், அத்தொகையை அதிமுக கட்சியிடம் வசூலிக்க உத்தரவிடக் கோரி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விளம்பரங்கள் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதியோடு நிறுத்தப்பட்டு விட்டதாக, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (மார்ச் 2) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவின் அடிப்படையில், ஆளுங்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசு செலவில் விளம்பரம் வெளியிடும் ஆளும் கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த ஜனவரி 21-ம் தேதி திமுக அளித்த மனுவைப் பரிசீலித்து ஒரு வாரத்திற்குள் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவுறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x