Published : 02 Mar 2021 10:51 AM
Last Updated : 02 Mar 2021 10:51 AM

காங்கிரஸ் விருப்ப மனு; மார்ச் 6, 7 தேதிகளில் நேர்காணல்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறவுள்ளது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்.6 அன்று சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு, போட்டியிடும் தொகுதிகள், பிரச்சாரப் பணிகள், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் திமுக, அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் பங்கீட்டுக் குழுவினர், திமுக தேர்தல் பங்கீட்டுக் குழுவினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறவுள்ளது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (மார்ச் 2) வெளியிட்டுள்ள அறிக்கை:

"நடைபெறவுள்ள 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து பிப்ரவரி 25 முதல் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. விருப்ப மனு அளிக்க இறுதி நாள் மார்ச் 5-ம் தேதி ஆகும்.

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த அனைவரிடமும் மார்ச் 6, 7-ம் தேதிகளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேர்காணல் நடைபெறவுள்ளது.

விருப்ப மனுவினைச் சமர்ப்பித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் நடைபெறும் நேர்காணலில் அவசியம் பங்கேற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x