Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

தேர்தல் செலவினத்தில் விலக்கு பெற வேண்டுமானால் தலைவர்களின் பட்டியலை கட்சிகள் மார்ச் 22-க்குள் அளிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவிப்பு

அரசியல் கட்சிகள் தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெற, தங்கள் கட்சித்தலைவர்களின் பட்டியலை வரும் மார்ச் 22-ம் தேதிக்குள் அளித்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் படி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது. இச்சலுகையைப் பெற, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 30 பேரின் பெயர் பட்டியலையும், அங்கீகாரமற்ற கட்சிகள் 15 பேரின் பெயர் பட்டியலையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெற வேண்டிய இந்த தலைவர்கள் பெயர் பட்டியலை, தேர்தல் அறிவிக்கை வெளியானதில் இருந்து 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல்கள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிவிக்கை மார்ச் 12-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

செலவுத் தொகையில் இருந்துவிலக்கு பெற விரும்பும் கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பில்பிரச்சாரம் செய்யும் தலைவர்கள்பெயர்ப் பட்டியலை தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையம் அல்லது தலைமை தேர்தல் அதிகாரிக்கு மார்ச் 22-ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பட்டியலில் உள்ளவர்கள் பயணச் செலவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். இதுதவிர மற்ற செலவினங்கள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

அதே நேரம் வேட்பாளருக்கு வேறு கட்சியின் நட்சத்திர தலைவர் பிரச்சாரம் செய்தால் அதில் விலக்கு கோர முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x