Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

பத்திரிகையாளர்கள் உட்பட10 பிரிவினருக்கு தபால் வாக்கு: தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி

சட்டப்பேரவை தேர்தலில் தேர்தல் நாளில் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள், ரயில்வே கார்டு, பரிசோதகர் உள்ளிட்ட 10 வகையான பணியாளர்களுக்கு தபால் வாக்கு வசதி வழங்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ராணுவம், துணை ராணுவத்தில் பணியாற்றும் சேவைபிரிவு ஊழியர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கு தபால் வாக்கு வசதி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், ரயில்வே பணியாளர்கள், விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் தபால் வாக்குவசதி அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் சென்னை வந்திருந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம், சென்னைபத்திரிகையாளர்கள் சார்பிலும்இக்கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து பரிசீலித்து வருவதாக அப்போது அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இதுதொடர்பான அறிவிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணைய மூத்த முதன்மை செயலாளர் நரேந்திரா என்.படோலியா வெளியிட்ட அறிவிக்கை:

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, மத்திய அரசுடன் நடத்திய ஆலோசனை அடிப்படையில், லோகோ பைலட், உதவி லோகோபைலட், மோட்டார் மேன், கார்டுகள், டிக்கெட் பரிசோதகர்கள், குளிர்சாதன பெட்டி உதவியாளர்கள், ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஆர்பிஎஃப் அலுவலர்கள், ரயில்வே துறையின் கீழ், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர், வாக்குப்பதிவு நாளில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றபத்திரிகையாளர்கள், விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து பணியாளர்கள் தேர்தல் நாளன்று பணியில் இருப்பார்கள்.

எனவே, அவர்களால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு தபால் வாக்கு வசதி அளிக்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டுநெறிமுறைகள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x